தமிழ்நாடு

tamil nadu

திருச்சியில் ஊக்கை விழுங்கிய 2 வயது குழந்தை.. வெற்றிகரமாக நீக்கிய அரசு மருத்துவர்கள்

By

Published : Aug 9, 2023, 3:20 PM IST

திருச்சியில் 2 வயது குழந்தை ஊக்கை விழுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அரசு மருத்துவர்கள் தீவிரமாகப் போராடி ஊக்கை அகற்றி குழந்தையின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.

திருச்சியில் ஊக்கை விழுங்கிய 2 வயது குழந்தை
திருச்சியில் ஊக்கை விழுங்கிய 2 வயது குழந்தை

திருச்சி: திருச்சியில் 2 வயது குழந்தை உணவு உட்கொள்ளும்போது தவறுதலாக திறந்த நிலையில் இருந்த ஊக்கை விழுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திருச்சி அரசு மருத்துவர்களின் தீவிர முயற்சியால் ஊக்கானது வெளியே எடுக்கப்பட்டு, அந்த குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

திருச்சி புதுக்கோட்டை விமான நிலையம் அருகில் குண்டூர் பர்மா காலனியைச் சேர்ந்த இரண்டு வயது குழந்தை உணவு உட்கொள்ளும்போது தவறுதலாக ஊக்கை விழுங்கியது. ஊக்கானது தொண்டையில் சிக்கிக் கொண்டதால் குழந்தை மூச்சு விடாமல் திணறியது. குழந்தையின் உடல் நலத்தில் என்ன பிரச்னை என்று தெரியாமல் பெற்றோர்கள் உடனடியாக குழந்தையை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள காது, மூக்கு, தொண்டை துறையின் தலைமை மருத்துவர் அண்ணாமலை தலைமையிலான மருத்துவக் குழுவினர் குழந்தைக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது தொண்டை பகுதியில் ஊக்கு திறந்த நிலையில் இருப்பதனை கண்டுபிடித்தனர். அதன் பிறகு குழந்தைக்கு மயக்க மருந்து வழங்கி, தொண்டையில் சிக்கியிருந்த ஊக்கை டியூப் வாயிலாக வெளியே எடுத்தனர்.

திருச்சி அரசு மருத்துவமனையில் பொது மருத்துவம், இருதயவியல், குழந்தைகள் நலப்பிரிவு, மூளை நரம்பியல், சிறுநீரகத்துறை, மூட்டு மற்றும் எலும்பு சிகிச்சைப் பிரிவு, காது, மூக்கு, தொண்டை பிரிவு, புற்றுநோய் சிகிச்சை பிரிவு, மனநல பிரிவு, ஒட்டுறுப்பு பிரிவு, குடல் நோய் சிகிச்சை பிரிவு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு, அதி நவீன சிகிச்சை பிரிவு, விபத்து அறுவை சிகிச்சை உள்ளிட்ட பிரிவுகளில் புறநோயாளிகளாக 4,500 பேர் சிகிச்சைப் பெற்று செல்கின்றனர். மேலும் உள்நோயாளிகளாக 1,200 பேர் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்றும் செல்கின்றனர்.

மேலும் நோயாளிகளின் வசதிக்காக சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன், அல்ட்ரா ஸ்கேன், வயிறு சம்பந்தப்பட்ட ஸ்கேன், எக்ஸ்ரே உள்ளிட்ட அதிநவீன ஸ்கேன் வசதிகள் உள்ளன. இந்த மருத்துவமனையில் தனியார் மருத்துவமனைக்கு இணையாக இருதயவியல், எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை, புற்று நோய் கட்டி அறுவை சிகிச்சை, உடல் உறுப்பு தானம் அறுவை சிகிச்சை உள்ளிட்டவைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது.

குழந்தைகள் ஊக்குகளை விழுங்கும் நிகழ்வு சாதாரணமாக இருந்தாலும் திறந்த நிலையில் உள்ள ஊக்கை விழுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது குழந்தை நல்ல ஆரோக்கியத்தோடு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து 2 வயது குழந்தையின் உயிரை காப்பாற்றிய அரசு மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இதையும் படிங்க:தமிழக மக்களுக்கு குட் நியூஸ்.. சென்னை வானிலை ஆய்வு மையம் அளித்த தகவல்!

ABOUT THE AUTHOR

...view details