தமிழ்நாடு

tamil nadu

கொப்பம்பட்டி துணை மின் நிலையத்தில் இடிதாக்கி பயங்கர தீ விபத்து

By

Published : Jun 5, 2021, 9:06 AM IST

திருச்சி : கொப்பம்பட்டி துணை மின் நிலையத்தில் இடிதாக்கி ஏற்பட்ட தீ விபத்தால் 25 கிராமங்கள் இருளில் மூழ்கின.

கொப்பம்பட்டி துணை மின் நிலையத்தில் இடிதாக்கி பயங்கர தீ விபத்து
கொப்பம்பட்டி துணை மின் நிலையத்தில் இடிதாக்கி பயங்கர தீ விபத்து

திருச்சி மாவட்டம் கொப்பம்பட்டியில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் துணை மின் நிலையம் செயல்பட்டுவருகிறது. இது 110 மெகாவாட் மின்திறன் கொண்டதாகும். இந்நிலையில் நேற்றிரவு (ஜூன் 4) சுமார் 9 மணி அளவில் கொப்பம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

அப்போது பயங்கர இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதில் கொப்பம்பட்டி துணைமின் நிலையத்தில் இடி விழுந்ததில் மின்மாற்றி வெடித்துச் சிதறியது. தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் துணைமின் நிலையத்தில் உள்ள மற்ற மின்மாற்றிகளுக்கும் தீ பரவும் என்ற அச்சம் இருந்தது.

அத்தோடு மின்மாற்றியில் பயன்படுத்தப்படும் திரவம் வெடித்துச் சிதறும் என்பதால், துணைமின் நிலையம் அருகே தோட்டத்தில் குடியிருந்த மக்கள் கால்நடைகளுடன் ஊருக்குள் தஞ்சமடைந்தனர்.

இது குறித்து தகவலறிந்த துறையூர், உப்பிலியாபுரம் தீயணைப்புத் துறையினர் விரைந்துவந்து தீயை அணைத்தனர்.

இதனால் வைரிசெட்டிபாளையம், நாகநல்லூர், டி.பாதர்பேட்டை, மங்களாபுதூர், சோபனபுரம், ஓரப்பள்ளி, ரெங்கநாதபுரம், பச்சமலை உப்பிலியாபுரம், பி. மேட்டூர் உள்பட 25 கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன. மேலும் சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய அலுவலர்கள் இடி தாக்கி தீ விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டனர்.

துணைமின் நிலையம் பலத்த சேதம் அடைந்திருப்பதால் மின்விநியோகம் எப்போது தொடங்கும் என உறுதியாகக் கூற முடியாது என மின்வாரிய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: வெளிமாநில மதுபாட்டில்கள் கடத்திய நபர் கைது: போலீஸ் விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details