தமிழ்நாடு

tamil nadu

ராமஜெயம் கொலை வழக்கு: 12 பேருக்கு 2 மாதத்திற்குள் உண்மை கண்டறியும் சோதனை!

By

Published : Nov 21, 2022, 10:35 PM IST

ராமஜெயம் கொலை வழக்கில் 12 ரவுடிகளுக்கு 2 மாதத்திற்குள் உண்மை கண்டறியும் சோதனை நடத்தி முடிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்

ரவுடிகளுக்கு 2 மாதத்திற்குள் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும்
ரவுடிகளுக்கு 2 மாதத்திற்குள் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும்

திருச்சி: அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி திருச்சி தில்லை நகரில் நடைப்பயிற்சிக்குச் சென்று கொண்டிருந்தபோது கடத்திக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கானது சிபிஐ விசாரித்த நிலையில் எந்த துப்பும் கிடைக்காததால் தற்போது சிபிசிஐடி சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் கொலை வழக்கில் சந்தேகத்துக்கிடமான 13 நபர்களிடம் (ரவுடி) உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்கு திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் மனு தாக்கல் செய்தனர். இதில் தென்கோவன் என்கின்ற சண்முகம் என்ற நபர் இந்த உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. மற்ற 12 நபர்களும் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்படும் 12 நபர்களில் சாமி ரவி, திலீப், சிவா, ராஜ்குமார், சத்தியராஜ், சுரேந்தர், நரைமுடி கணேசன், மோகன்ராம், கலைவாணன், தினேஷ், மாரிமுத்து ஆகிய 11 (ரவுடிகள்) நபர்களுக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள லெப்ட் செந்தில் என்பவருக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் முழு உடல் தகுதி பரிசோதனை செய்யப்பட்டது.

12 ரவுடிகளின் உடல் முழு பரிசோதனை அறிக்கையை திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து இம்மனுவை விசாரித்த நீதிபதி உண்மை கண்டறியும் சோதனைக்கு தென்கோவன் என்கின்ற சண்முகம் சம்மதம் தெரிவிக்காததால் இந்த சோதனையிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டு மீதமுள்ள 12 நபர்களுக்கு இரண்டு மாதத்திற்குள் உண்மை கண்டறியும் சோதனை நடத்தி முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அந்த 12 பேருடைய வழக்கறிஞர்கள் இந்த சோதனையின்போது இருக்க அனுமதியும் வழங்கி உத்தரவிட்டார்.

இதற்கான உத்தரவு சான்றை பெற்ற பிறகு சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகள் டெல்லியில் உள்ள உண்மை கண்டறியும் சோதனை நடத்தும் தலைமை அலுவலகத்தில் நீதிபதி உத்தரவை சமர்ப்பித்து அதன் பின்னர் இச்சோதனையை தொடங்க உள்ளனர்.

ராமஜெயம் கொலை வழக்கு: 12 பேருக்கு 2 மாதத்திற்குள் உண்மை கண்டறியும் சோதனை!

நீதிமன்றம் வெளியே வந்த மோகன் ராம் வழக்கறிஞர் ஆனந்த் முனிராஜ் கூறுகையில், ’கொலை செய்யப்பட்ட ராமஜெயத்திற்கு பல்வேறு வகையான முன் விரோதங்கள் இருந்தது என சிபிஐ விசாரணை செய்ததில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் முன் விரோதத்தை கண்டுபிடித்து அதன் பிறகு எதிரிகள் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். இந்த உண்மை கண்டறியும் சோதனையின் போது தங்கள் தரப்பு மருத்துவர்களை அனுமதிக்கவில்லை. இந்த வழக்கைத் தவிர மற்ற வழக்கு குறித்த கேள்விகள் கேட்கக்கூடாது; என நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.

இதையும் படிங்க: விமான கழிவறையில் தங்க பிஸ்கட் பறிமுதல் - சுங்கத்துறை விசாரணை

ABOUT THE AUTHOR

...view details