தமிழ்நாடு

tamil nadu

Drug Abuse: போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களை அன்பால் திருத்துங்கள் - டிஎஸ்பி ராமநாதன்

By

Published : Jun 26, 2023, 3:50 PM IST

Updated : Jun 26, 2023, 4:36 PM IST

பிள்ளைகள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார்கள் என பெற்றோர்கள் அறிந்து கொண்டால் அவர்களை தண்டிக்காமல், அவர்களை அரவணைத்து அன்பால் திருத்துங்கள் என டிஎஸ்பி ராமநாதன் கூறியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

திருச்சி: சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை (International Day Against Drug Abuse) முன்னிட்டு தமிழக காவல்துறையினர் பல்வேறு விதமான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக போதை ஒழிப்பு விழிப்புணர்வு பதாகைகள், சுவரொட்டிகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி

கஞ்சா, மெத்தம்பெட்டமைன் (Methamphetamine), ஆம்பெட்டமைன் (Amphetamine), LSD ஸ்டாம்புகள், Hash Drug எனப்படும் கஞ்சா ஆயில் போன்ற நவீன காலத்து போதை பொருட்கள் மற்றும் டைடல் (Tidal Tablet), நைட்ரவெட் (Nitravet Tablet) உள்ளிட்ட உடல் வலி நிவாரண மாத்திரைகள் (Body Pain Relief Pills) உள்ளிட்ட போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல் தடுப்பதற்காக காவல்துறை மூலம் பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். தீவிரமாக கண்காணித்து சட்டவிரோதமாக போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள், பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர்.

மேலும், இளைய சமுதாயம் போதை பொருட்களுக்கு அடிமையாகி எதிர்காலத்தை தொலைக்காமல் தடுப்பதற்காக காவல் அதிகாரிகள் தலைமையில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு, அறிவுரைகளை வழங்கி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, இன்று (ஜூன் 26) திருச்சி மாவட்டம் மணப்பாறை காவல் சரகத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி நடைபெற்றது.பேரணியில் டிஎஸ்பி ராமநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.காமராஜர் சிலையில் தொடங்கி முக்கிய வீதிகளின் வழியாக சென்று ரவுண்டானா பகுதியில் முடிவடைந்தது.

அப்போது போதை பொருள் விழிப்புணர்வு குறித்து டிஎஸ்பி ராமநாதன் பேசுகையில், "ஒருவர் போதை பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டாராயின் அவர் நினைத்தால் அப்பழக்கத்திலிருந்து மீண்டு, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும்.

பிள்ளைகள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார்கள் என பெற்றோர்கள் அறிந்து கொண்டால் அவர்களை குற்றம் சொல்வதோ, தண்டிப்பதோ கூடாது. அவர்களை அரவணைத்து போதை பழக்கத்தால் ஏற்படும் பின்விளைவுகளை எடுத்து கூறி, அவர்களை அப்பழக்கத்திலிருந்து சிறிது சிறிதாக வெளி கொண்டுவர வேண்டும்.

மறுவாழ்வு மையங்களில் முறையான சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் போதை பழக்கத்தில் இருந்து மீண்டுவர முடியும். தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கும், பதினெட்டு வயதிற்கு குறைவானோருக்கு மதுபானம், சிகரெட், பான் மசாலா போன்றவற்றை விற்பனை செய்வோருக்கும் தக்க தண்டனை வழங்கப்படும். அரசோடு சேர்ந்து மக்களாகிய நாமும் விழிப்புணர்வோடு செயல்பட்டு போதையற்ற உலகை உருவாக்க வேண்டும்" என்று கூறினார்.

இந்த பேரணியில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு போதை ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த பதாகைகளை கையில் ஏந்தியும், விழிப்புணர்வு வாசகங்களை முழக்கமிட்டவாறும் சென்றனர்.

இதையும் படிங்க:ஓட்டுநர் ஷர்மிளாவை கார் உரிமையாளராக்கிய கமல்ஹாசன்

Last Updated : Jun 26, 2023, 4:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details