தமிழ்நாடு

tamil nadu

'நர்சரி பள்ளிகள் திறப்பு எப்போது?' - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

By

Published : Oct 16, 2021, 5:34 PM IST

நர்சரி பள்ளிகள் திறப்பு எப்போது என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார்.

குளிர்சாதன பேருந்தில் பயணித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
குளிர்சாதன பேருந்தில் பயணித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாகுளிர்சாதன பேருந்தில் பயணித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிமொழி

திருச்சி: திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து துவாக்குடி வரை குளிர்சாதன வசதி கொண்ட நகரப்பேருந்து சேவையை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (அக்.16) தொடங்கி வைத்து பேருந்தில் பயணம் செய்தார்.

இந்த பேருந்து துவாக்குடியில் இருந்து மத்திய பேருந்து நிலையத்திற்கு எட்டு முறை இயக்கப்பட உள்ளது. தொடக்க பயணச்சீட்டு 15 ரூபாயில் தொடங்கி, 30 ரூபாய் வரை பயண கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களை துன்புறுத்தினால் நடவடிக்கை

விழாவுக்குப் பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடத்தில் பேசுகையில், "தமிழ்நாடு முழுவதும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு நடைபெற்றதை போல, பள்ளி ஆசிரியர்களுக்கு 'ஜீரோ கவுன்சலிங்' நடத்த வாய்ப்பில்லை. ஆசிரியர்களுக்கு நடத்தவிருக்கும் கவுன்சலிங் குறித்த கொள்கைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

கரோனா காலத்தில் ஆசிரியர்கள் பணியின்போது உயிரிழந்திருந்தால், அவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வாய்ப்பில் முன்னுரிமை கிடைப்பது தொடர்பான கோரிக்கை முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.

பள்ளி வரும் மாணவர்களை ஆசிரியர்கள் துன்புறுத்தக் கூடாது. அவர்களை பள்ளிக்கு வரவழைப்பதுதான் உங்கள் பணி. ருத்ராட்சம் அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது என மாணவர்களை சில பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாணவர்களை பள்ளிக்கு வரவழைப்பதே ஆசிரியர்களின் கடமை. மாறாக அவர்களுக்கு எந்த ஒரு பாகுபாடும் காட்டக் கூடாது. மாணவர்களை துன்புறுத்தும் ஆசிரியர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

குளிர்சாதன பேருந்தில் பயணித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

நர்சரி பள்ளிகள் திறப்பு

கரோனா இருந்தாலும், இல்லாவிட்டாலும் கல்வி தொலைக்காட்சி எப்போதும் போல தொடர்ந்து இயங்கும். நீட் தேர்வு சம்பந்தமாக ஏற்கனவே பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அது சம்பந்தமான முயற்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஈடுபட்டுள்ளார்.

சட்டப் போராட்டம் ஒரு பக்கம் இருந்தாலும், அதற்காக யாரும் படிக்காமல் இருந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் அதற்கென சிறப்பு வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. இன்னும் வலுப்படுத்துவதற்கு அரசாங்கம் என்ன செய்ய வேண்டுமோ அதையும் செய்யும். நர்சரி பள்ளிகள் திறப்பது குறித்த அறிவிப்பு தவறுதலாக வந்துள்ளது.

முதலமைச்சருடன் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில், அங்கன்வாடி குழந்தைகளுக்கு கட்டாயம் சத்துணவு கொடுப்பது, அவர்களை மீண்டும் வரவழைப்பது குறித்தும்தான் விவாதித்தோம். ஆனால் அறிவிப்பில் நர்சரி, கிண்டர்கார்டன் பள்ளிகளும் இணைந்து வந்துள்ளது. இது குறித்த தெளிவான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். நர்சரி பள்ளிகள் திறப்பது குறித்தும் விரைவில் அறிவிப்பு வெளியாகும்” என்றார்.

இதையும் படிங்க:நான் முழு நேரத் தலைவர்; ஊடகத்திடம் பேசுவதை நிறுத்துங்கள்; மறுமலர்ச்சிக்கு ஒற்றுமை தேவை- சோனியா காந்தி!

ABOUT THE AUTHOR

...view details