தமிழ்நாடு

tamil nadu

''தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக உள்ளது'' - டிஜிபி சைலேந்திரபாபு

By

Published : Mar 3, 2023, 8:54 PM IST

மாநில அளவில் உள்ள எல்லா ரவுடிகளும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும்; தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக உள்ளது எனவும் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

செய்தியாளர்களைச் சந்தித்த டிஜிபி

திருச்சிஅண்ணா விளையாட்டு அரங்கத்தில், தமிழ்நாடு காவல் துறை மண்டல அளவிலான போட்டிகளை தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு தொடங்கி வைத்தார். அந்நிகழ்வுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக உள்ளது என்பதற்கு சில வரையறைகள் உள்ளன. அதில், சாதிக் கலவரங்கள், மதக் கலவரங்கள் போன்ற மோதல்கள் எதுவும் இல்லாமல், துப்பாக்கிச் சூடுகள், சாராயச் சாவுகள் இல்லாமல் மிக அமைதியாக தமிழ்நாடு தற்போது உள்ளது. அதேபோல, மாநில அளவில் உள்ள எல்லா ரவுடிகளின் பட்டியல்களும் தயாரிக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் இருந்து தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த பல ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், நிதி நிறுவனங்கள் மூலம் பல லட்சம் மக்களை ஏமாற்றி வெளிநாடுகளுக்கு தப்பி சென்றவர்களை 'இன்டர்போல்' போலீஸ் மூலம் தொடர்புகொண்டு, அவர்களை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மாநகர விரிவாக்கம் என்பது திருச்சி மட்டுமல்ல, சென்னை உள்ளிட்டப் பல்வேறு நகரங்களிலும் இதுபோன்ற விரிவாக்கம் என்பது தேவையாக உள்ளது. புதிய தொழிற்சாலைகள், புதிய குடியிருப்புகள் என்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, தேவையின் அடிப்படையில் புதிய காவல் நிலையங்கள் உருவாக்கப்படும். அது விரைவில் நடக்கும்.

தமிழ்நாடு முதலமைச்சர், காவலர்களுக்கு, 7 நாள் முழுவதும் வேலை என்று இருந்ததை சட்டத்திருத்தம் செய்து, மற்ற அரசு ஊழியர்களைப் போல வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டும் தான் வேலை. ஆறாவது நாள் வேலை செய்தால் அதற்கு ஈட்டுத்தொகை (ஈசிஆர்) வழங்கவுத்தரவிட்டு, அத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 7ஆவது நாள் கட்டாய ஓய்வு வழங்கப்படுகிறது.

ஒரு சில காலகட்டங்களில், குறிப்பாக, ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு, திருவண்ணாமலை தீபம் போன்ற முக்கியமான திருவிழா காலங்களில் விடுமுறை வழங்க முடியாது என்ற நிலையுள்ளது. இருப்பினும், வாரத்தில் ஒரு நாள் காவலர்களுக்கென விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது" என்று கூறினார்.

அப்போது, அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலைவழக்கு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ''அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கின் விசாரணை நல்ல முறையில் சென்று கொண்டிருக்கிறது. அவ்வழக்கு மீண்டும் சிபிஐக்கு மாறுவதற்கான வாய்ப்புகள் இல்லை. அதேபோல, வேங்கைவயல் சம்பவம் தொடர்பான சிபிசிஐடி விசாரணையும் சரியான முறையில் சென்று கொண்டிருக்கிறது. அவ்வழக்கும் சிபிஐக்கு மாறுவதற்கான வாய்ப்பு இல்லை. விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவர்" என்று தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.

இதையும் படிங்க:டெண்டர் ஒதுக்க ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியதாகப் புகார் - பாஜக எம்எல்ஏ மகன் கைது!

ABOUT THE AUTHOR

...view details