தமிழ்நாடு

tamil nadu

பச்சை முண்டாசு கட்டி மஜகவினர் நூதனப் போராட்டம்!

By

Published : Sep 30, 2020, 11:24 PM IST

நாகை : மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பச்சை முண்டாசு கட்டி மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நூதனப் போராட்டம் நடத்தப்பட்டது.

பச்சை முண்டாசு கட்டி மஜகவினர் நூதனப் போராட்டம்!
பச்சை முண்டாசு கட்டி மஜகவினர் நூதனப் போராட்டம்!

செப்டம்பர் 14ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் மக்களவையில் எட்டு சட்ட முன்வடிவுகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. குறிப்பாக, உழவர் உற்பத்தி வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) மசோதா 2020, விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு அளித்தல்) விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் மசோதா 2020 ஆகிய மூன்று சட்ட முன்முடிவுகளை மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அறிமுகப்படுத்தினார்.

இந்த மூன்று சட்ட முன்வடிவுகளை காங்கிரஸ், டி.எம்.சி., திமுக, மதிமுக, விசிக, ஆர்.ஜே.டி., சிபிஐ, சிபிஐ (எம்) உள்ளிட்ட 18 எதிர்க்கட்சிகள் 'உழவர்களுக்கு எதிரான சதி' எனக் குறிப்பிட்டு எதிர்ப்புத் தெரிவித்தன.

இந்நிலையில், நேற்றுமுன் தினம் இந்திய குடியரசுத் தலைவர் அவற்றுக்கு ஒப்புதல் அளித்து, சட்டங்களாக அங்கீகரித்தார்.

நாடு முழுவதும் மத்திய அரசின் இந்தச் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், தெலங்கானா, ஹரியானா ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

அந்த வகையில், மூன்று புதிய சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி ஒரு வார கால தொடர் போராட்டத்தை மனிதநேய ஜனநாயக கட்சி அறிவித்து நடத்திவருகிறது.

அதன் ஒரு பகுதியாக, நாகை மாவட்டம் திருமருகல் கடைத்தெருவில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், நாகை சட்டப்பேரவை உறுப்பினருமான தமிமுன் அன்சாரி தலைமையில் பச்சை முண்டாசு கட்டி நூதனப் போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தில் அக்கட்சியின் தொண்டர்கள், விவசாயிகள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

ABOUT THE AUTHOR

...view details