தமிழ்நாடு

tamil nadu

கண்டுகொள்ளப்படாத அம்மா உணவகங்கள்.. குறைக்கப்பட்ட உணவுப்பொருட்கள்.. மக்கள் ஆதரவு பெற்ற திட்டம் வீழ்ந்ததா?

By

Published : Aug 7, 2023, 11:04 PM IST

அம்மா உணவகத்துக்கு வழங்கப்படும் அரிசி, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாக திருப்பூர் மாநகராட்சியில் பணியாற்றும் அம்மா உணவக ஊழியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கண்டுகொள்ளப்படாத அம்மா உணவகங்கள்
கண்டுகொள்ளப்படாத அம்மா உணவகங்கள்

கண்டுகொள்ளப்படாத அம்மா உணவகங்கள்.. குறைக்கப்பட்ட உணவுப்பொருட்கள்.. மக்கள் ஆதரவு பெற்ற திட்டம் வீழ்ந்ததா?

திருப்பூர்:மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலத்தில் தொடங்கப்பட்டு பொதுமக்களின் நல்ல வரவேற்பைப் பெற்ற திட்டங்களில் ஒன்று அம்மா உணவகம். மலிவு விலையில் காலை, மதிய உணவு வழங்கும் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டது ஏழை, எளியவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. இது திமுக ஆட்சி மாற்றத்திற்குப் பின்னரும் தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறது.

பல்வேறு வெளிமாநிலங்கள் கூட இந்த திட்டத்தை தங்கள் மாநில மக்களுக்காக செயல்படுத்தினார்கள். குறிப்பாக ஆந்திரா, ராஜஸ்தானில் இந்த மலிவு விலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டது. இப்படி பெருமளவுக்கு மக்கள் வரவேற்பு பெற்ற திட்டம் தான் அம்மா உணவகம்.

2013ம் ஆண்டு சென்னை மாநகராட்சியில் 127 அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டன. அது சென்னையிலேயே 402 ஆகியது. பின்னர் மற்ற மாநகராட்சிகளுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இவ்வாறு தொடங்கப்பட்ட அம்மா உணவகங்கள் மூலமாக, திருப்பூர் மாநகரில் 10 அம்மா உணவகங்கள் செயல்படுத்தப்பட்டன.

5 ரூபாய்க்கு வழங்கப்பட்ட உணவு சாலையோர வியாபாரிகள், பனியன் தொழிலாளர்கள், வேலைக்கு செல்லும் பெண்கள், ஏழை, எளியவர்கள் என அனைவரின் வரவேற்பையும் பெற்றது. இப்படி மக்கள் நலனுக்காக செயல்படுத்தப்பட்ட இந்த திட்டத்தினால் மாநகராட்சிக்கு பெரிய அளவு நிதிச்சுமை இருந்த போதும், மக்கள் முழுமையாக பயனடையக்கூடிய திட்டமாக இருக்கிறது. கரோனா பேரிடர் காலத்தில் அம்மா உணவகங்கள் பங்கு மகத்தானதாக இருந்தது என்பது குறிப்பிடதக்கது.

திருப்பூரில் பழைய பேருந்து நிலையத்தில் செயல்படுத்தப்பட்டு வந்த அம்மா உணவகம் பழைய பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கப் பணிகளுக்காக அகற்றப்பட்டது. ஏழை, எளியவர்கள் வெறும் 5 ரூபாய்க்கும் 10 ரூபாய்க்கும் அம்மா உணவக மலிவு விலை உணவில் வயிற்றை நிறைக்க முடிந்தது.

இப்போது பஸ் ஸ்டாண்டுக்கு வருபவர்கள் குறைந்தது ஒரு வேளைக்கு 50 முதல் 150 ரூபாய் இல்லாமல் ஒரு வேளை உணவு உண்ண முடியாது. அதேபோல, அனுப்பர்பாளையம் அம்மா உணவகமும் மாநகராட்சியால் கைவிடப்பட்டு விட்டது. மேலும் செயல்படக் கூடிய மற்ற அம்மா உணவகங்களுக்கு திருப்பூர் மாநகராட்சி வழங்கும் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு இடுபொருட்களை பாதிக்கும் மேல் குறைத்துவிட்டதால், அம்மா உணவக திட்டம் வீழ்ச்சி அடைந்து வருகிறது.

மாநகராட்சி வழங்கக் கூடிய பொருட்களை மட்டுமே சமைத்து வழங்க வேண்டிய நிலை இருப்பதால் கடந்த சில ஆண்டுகளில் 1000 பேருக்கு உணவு வழங்கிய ஒவ்வொரு அம்மா உணவகமும் இன்று 300 அல்லது 400 பேருக்கு மட்டுமே உணவு வழங்கும் நிலையில் இருப்பதாக அதன் ஊழியர்களே தெரிவிக்கிறார்கள்.

அம்மா உணவகங்களில் பணியாற்றும் பெண்கள் சிலர் கூறும்போது, “அம்மா உணவகங்களில் ஆரம்பத்தில் வந்த அளவு உணவு சமைக்கக் கூடிய அரிசி, பருப்பு உள்ளிட்டவை குறைக்கப்பட்டு விட்டது. 2400 கிலோ அரிசி வழங்கப்பட்ட அம்மா உணவகத்துக்கு இன்று 600 கிலோ அரிசி மட்டுமே வழங்கப்படுகிறது. வருகிற பொருட்களுக்கு அளவாக மட்டுமே சமைத்து வழங்கும் நிலை இருப்பதால், ஏராளமானவர்கள் திரும்பிச் செல்லும் நிலை உள்ளது. அம்மா உணவகத்தில் உள்ள ஸ்டீம் குக்கர், பாய்லர் உள்ளிட்டவைகளை பயன்படுத்தக் கூடிய அளவில் உணவு இடுபொருட்கள் வருவதில்லை. அதனால் சாதாரண பாத்திரத்தில் தான் சமைத்து வழங்குகிறோம்” என்றார்.

அம்மா உணவக ஊழியர் அன்னபூரணி கூறுகையில், “ மாநகராட்சி வழங்கக் கூடிய பொருட்களை முழுமையாக வழங்கினால், மக்கள் பயனடையக் கூடிய அளவுக்கு அதிகம் பேருக்கு உணவு சமைத்து வழங்க முடியும். பொருட்களை குறைத்து விட்டார்கள். கொடுக்கும் அளவுக்கு சமைத்து வழங்குகிறோம்.

காய்கறிகள், வெங்காயம், தக்காளி எல்லாம் விண்ணைத் தொடும் அளவுக்கு விலை ஏறி விட்ட நிலையில், காய்கறிகளுக்கு வழங்கப்படும் தொகையும் போதவில்லை. அரிசி, பருப்பு, உளுந்து உள்பட அனைத்து மளிகை பொருட்களையும் முன்பு போல அதிகமாக அனுப்பினால் பொதுமக்களுக்கு அதிகமாக சமைத்து வழங்க முடியும்" என்றார்.

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமானப் பணி காரணமாக அம்மா உணவகம் இருப்பதே தெரியாத அளவுக்கு மறைவிற்கு வந்து விட்டது. இங்கு மெயின் ரோடு பகுதியில் ஒரு கேட் வைத்தால் ஏராளமான பொதுமக்கள் வருவார்கள். அரசு மருத்துவமனைக்கு வரக்கூடிய ஏழை எளியவர்கள் இப்போது கூட மணிக்கணக்கில் உட்கார்ந்திருந்து அம்மா உணவக உணவுகளை வாங்கிச் சாப்பிட்டு செல்கிறார்கள்.

எனவே உணவு தயாரிக்கும் மளிகை பொருட்களை அதிகரித்து வழங்க வேண்டும். இது குறித்து திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் கூறும் போது, “அம்மா உணவகங்களுக்கு பொருட்கள் வழங்குவது குறைக்கப்படவில்லை, மக்கள் ஆர்வம் குறைந்துள்ளது” என்றனர்.

மலிவு விலையில் வழங்கப்படும் உணவிற்கு பொதுமக்கள் வரவேற்பு எப்படி குறையும்? இன்றைக்கும் ஒவ்வொரு அம்மா உணவகமும் எப்போது திறப்பார்கள் என்று காத்திருந்து சாப்பிட்டுச் செல்லும் ஏழை, எளிய தொழிலாளி மக்கள் இருக்கிறார்கள். அதே நேரம் சமைக்கும் உணவுகள் எந்த அம்மா உணவகத்திலும் மீதமாவதில்லை. எனவே மக்கள் வரவேற்பு மிக்க இந்த திட்டத்துக்கு கூடுதலாக பொருட்களை வழங்க திருப்பூர் மாநகராட்சி முன் வரவேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

இதையும் படிங்க:அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரம்.. உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details