திருப்பத்தூர் மாவட்டம் பொம்மிகுப்பம் பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், பொம்மிகுப்பம் பழைய அத்திகுப்பம் பகுதியைச் சேர்ந்த ராமர் (60) என்பவர் இன்று (பிப்.19) உயிரிழந்தார்.
இவரது உடலை நல்லடக்கம் செய்வதற்காக ஆற்றின் மறுபுறமுள்ள சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றனர். அப்போது, அவர்கள் செல்லும் பாதை அடைக்கப்பட்டிருந்தது. மேலும், ஆற்றில் தண்ணீர் செல்வதால் உடலை எடுத்துச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், சுடுகாட்டிற்குச் செல்ல வழியில்லாததால், உடலை சாலையில் வைத்த அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பத்தூர் கிராம ஆய்வாளர் சிரஞ்சீவி, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு எடுத்துரைத்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இதனையடுத்து, அவர்கள் சாலை மறியலை கைவிட்டு 5 அடி ஆழம் கொண்ட தண்ணீரில் ஆற்றை கடந்து இறந்தவரின் உடலை சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது, “நாங்கள் இறந்தவர்களின் உடலை வைத்து அழுவதா? இல்லை அடக்கம் செய்ய வழி தடம் இல்லாமல் அழுவதா? எனத் தெரியவில்லை.