தமிழ்நாடு

tamil nadu

VAO வேலை வாங்கித் தருவதாக ரூ.27 லட்சம் மோசடி - தோட்டக்கலைத்துறை உதவி அலுவலர் கைது!

By

Published : Jun 22, 2023, 12:33 PM IST

கிராம நிர்வாக அலுவலர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி போலியான பணி ஆணைகளை வழங்கி ரூ.27 லட்சம் மோசடி செய்த தோட்டக்கலைத்துறை உதவி அலுவலர் கைது செய்யப்பட்டார்.

Etv Bharat
Etv Bharat

திருப்பத்தூர்:நாட்றம்பள்ளி ஒன்றியம், திம்மாம்பேட்டை அடுத்த புல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் எல்லப்பன் (வயது 53). இவர் நாட்றம்பள்ளி ஒன்றிய அதிமுக பொருளாளராக உள்ளார். இவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுக்கு புகார் மனு அனுப்பி இருந்தார்.

அந்த மனுவில், ”என் மகன் சோமு மற்றும் உறவினர் தாமோதரன் ஆகியோருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, என்னை ஏமாற்றி ரூபாய் 27 லட்சம், நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை வட்டம், வழிவளம் கிராமத்தைச் சேர்ந்த தோட்டக் கலைத்துறை அதிகாரி பால தண்டாயுதம் மற்றும் அவரது கூட்டாளிகள் தென்காசி மாவட்டம், கடையநல்லூர் தாலுகா பாம்பு கோயில் சந்தையைச் சேர்ந்த பரமசிவம், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த சுரேஷ் ஆகியோர் பணத்தைப் பெற்றுக் கொண்டு சென்று, பின்னர் போலியான கிராம நிர்வாக அலுவலர் பணி ஆணைகளை வழங்கினார்.

இதையும் படிங்க: பாலாற்றில் செத்து மிதந்த மீன்கள்.. ஆம்பூரில் போராட்டத்தில் குதித்த விவசாயிகள்!

இந்த ஆணைகள் சில நாட்களில் போலியானது எனத் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர்களிடம் பலமுறை பணத்தை திருப்பிக் கேட்க தர மறுத்து ஏமாற்றி வருகின்றனர். பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றிய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரி’’ மனு அளித்திருந்தார்.

அதன் பேரில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் பணத்தை பெற்று கிராம நிர்வாக அலுவலர் வேலைக்கு போலியான பணி ஆணையை வழங்கிய நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து திம்மாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் போலி ஆணை கொடுத்து மோசடி செய்த திருவாரூர் மாவட்டம், கோட்டூர் பகுதியில் உள்ள தோட்டக்கலைத்துறை உதவி அலுவலர், பாலதண்டாயுதம் (55) என்பவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரை வாணியம்பாடி கொண்டு வந்து போலீசார் சிறையில் அடைத்தனர். போலியாக கிராம நிர்வாக அலுவலர் பணி ஆணைகள் வழங்கியதாக தோட்டக்கலை துறை உதவி அலுவலர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: "குடி தண்ணீரில் கூட சாதி பார்க்கின்றனர்" - மாஸ்க் அணிந்து பட்டியலின சமூகத்தினர் மௌன போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details