தமிழ்நாடு

tamil nadu

100 நாளில் 535 கரோனா நோயாளிகள் பூரண குணம்: சித்த மருத்துவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு

By

Published : Oct 27, 2020, 5:53 PM IST

திருப்பத்தூர்: மாவட்டத்தில் 535 கரோனா நோயாளிகளை 100 நாளில் குணமடைய செய்து சாதனைபுரிந்த சித்த மருத்துவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சித்த மருத்துவர்கள் சாதனை
சித்த மருத்துவர்கள் சாதனை

திருப்பத்தூர் மாவட்டம் அக்ரஹாரம் பகுதியில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் கரோனா நோய்த் தொற்றுக்கான சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு 100 நாள்களில் 535 கரோனா நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆண்டியப்பணூர் அரசு சித்த மருத்துவர் விக்ரம் குமார், வேலூர் புற்று மகரிஷி மருத்துவர் பாஸ்கர் இணைந்து இந்தச் சாதனையை புரிந்துள்ளனர்.

இந்தச் சாதனைக்கு உறுதுணையாக இருந்து பல்வேறு உதவிகளைச் செய்து ஊக்கப்படுத்திய மாவட்ட ஆட்சியர் சிவனருளுக்கும் சித்த மருத்துவர்களுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர், பல வருடம் பாரம்பரியமிக்க வேலூர் ஸ்ரீ புற்று மகரிஷி சித்த மருத்துவ மையத்திலிருந்து சித்த மருத்துவத்தின் வாரிசாக நமக்கு கிடைத்திருக்கும் மருத்துவர் பாஸ்கர் மேலோட்டமாக மக்களைப் பார்த்து மருத்துவம் செய்யும் சித்த மருத்துவராக இல்லாமல் இரவும் பகலும் கடந்த 100 நாள்களாக உழைத்துக் கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் உலகம் முழுவதும் மூலிகை முகக்கவசத்தின் மகிமை பரவியுள்ளது. அதைக் கண்டுபிடித்து இன்றுவரை இலவசமாகவே எல்லோருக்கும் வழங்கி கொண்டிருக்கும் சாதனைக்குச் சொந்தக்காரர். நான் கூட அந்த மூலிகை முகக்கவசத்தைதான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

என்னைச் சுற்றி இருக்கிறவர்கள் போன் செய்து எங்களுக்கும் மூலிகை முகக்கவசம் கொடுங்கள் என்று கேட்கும் அளவிற்கு அதன் மகத்துவம் மக்களுக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது.

உலக வரைபடத்தில் திருப்பத்தூர் மாவட்டம் ஒரு அடையாளமாகத் திகழும் அளவிற்கு நம்முடைய மாவட்டத்தில் உள்ள சித்த மருத்துவர்களின் சாதனை உயர்ந்திருக்கிறது.

விரைவில் நம்முடைய மாவட்டத்திலேயே சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம் ஐந்து ஏக்கர் பரப்பளவில் அமைக்க பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் கே.சி. வீரமணியிடம் கோரிக்கைவைத்துள்ளோம். நிச்சயமாக அது நிறைவேறும்" என்று கூறினார்.

இந்த விழாவில் நோய்த்தொற்று பாதிக்கப்பட்டு குணமான துணிக்கடை உரிமையாளர் ஒருவர் ரூபாய் 50 ஆயிரம் நன்கொடையாக கொடுத்தார். மருத்துவமனையில் சிறப்பாகச் செயல்பட்ட களப்பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கேடயங்களை வழங்கினார்.

ABOUT THE AUTHOR

...view details