தமிழ்நாடு

tamil nadu

திருப்பத்தூர் அருகே வீட்டில் பிரசவமான பெண் மருத்துவமனையில் உயிரிழப்பு.. என்ன நடந்தது?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 8, 2023, 10:54 AM IST

Tirupattur news: திருப்பத்தூர் அருகே வீட்டில் பிரசவமான பெண் அதிக ரத்தப்போக்கு காரணமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

pregnant girl
திருப்பத்தூர் அருகே வீட்டில் பிரசவமான பெண் அதிக ரத்தப்போக்கால் உயிரிழப்பு

திருப்பத்தூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த சாவடியூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (28) என்பவருக்கும், எலவம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஹேமலதா என்ற பெண்ணுக்கும் ஐந்து வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. ரமேஷ் ஜேசிபி ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

தற்போது ஹேமலதா நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்த நிலையில், வயிற்று வலி காரணமாக கொரட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்காக வந்துள்ளார். அப்போது ஹேமலதாவைப் பரிசோதித்த மருத்துவர்கள், இது பிரசவ வலி. குழந்தை பிறப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. உடனடியாக மருத்துவமனையில் அனுமதியாகி விடுங்கள் என கூறியுள்ளனர்.

இந்த நிலையில், ஹேமலதா மருத்துவமனையில் அனுமதி பெறாமல் வீட்டிற்குச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, ஹேமலதாவிற்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டு வீட்டிலேயே பெண் குழந்தையும் பிறந்துள்ளது. உடனடியாக பெண் வீட்டார் ஆம்புலன்ஸ்-க்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஆம்புலன்சில் இருந்த அவசர மருத்துவ உதவியாளர்கள் ஹேமலதாவின் தொப்புள் கொடியை துண்டித்துள்ளனர்.

பெண் வீட்டார் 108 ஆம்புலன்ஸ்ஸில் இருந்த அவசர மருத்துவ உதவியாளர்களிடம் அருகிலுள்ள கொரட்டி மருத்துவமனைக்கு செல்லாமல் முதல் பிரசவம் ஆன குனிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லுங்கள் எனக் கூறியதன் காரணமாக, அங்கிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குனிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்றுள்ளதாகத் தெரிகிறது. அங்கு ஹேமலதாவை பரிசோதித்த மருத்துவர்கள், அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது, எனவே திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த நிலையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி ஹேமலதா உயிரிழந்தார். உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:தஞ்சையில் இறந்தவர்களின் உடலை ரயில் பாதையில் சுமந்து செல்லும் கிராம மக்கள்.. காரணம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details