தூத்துக்குடி: தருவைகுளம் மீனவ கிராமத்திலிருந்து ஆழ்கடல் மீன்பிடிப்பிற்காக, கடந்த அக்டோபர் 1ஆம் தேதி, தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த மைக்கேல் பாக்கியராஜ் என்பவரது விசைப்படகில், அதே பகுதியைச் சேர்ந்த சேர்ந்த அந்தோணி செல்வசேகரன்(23), ஆதிநாராயணன்(20), மகேஷ்குமார்(24), ராமேஸ்வரத்தைச் சேர்ந்த உதயகுமார்(31), தூத்துக்குடி வேம்பார் பகுதியை சேர்ந்த மைக்கேல்ராஜ்(21), அந்தோணி ஆன்சல் கிறிஸ்டோபர் (22), அதிசய பரலோக திரவியம்(25), மதுரையைச் சேர்ந்த மாதேஷ் குமார் (15), சிலுவை பட்டி பகுதியைச் சேர்ந்த அன்பு சூசை மிக்கேல் (48), விக்னேஷ், (31) மற்றும் மணி, சக்தி உட்பட 12 மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.
அப்போது, கடலில் ஏற்பட்ட புயலின் காரணமாக கடந்த அக்டோபர் 20ஆம் தேதி அன்று, திசைமாறி மாலத்தீவு கடல் எல்லைக்குள் சென்றதாகக் கூறப்பட்டது. அதையடுத்து 12 தமிழக மீனவர்களையும் மாலத்தீவு கடலோர காவல் படையினர், கைது செய்ததுடன் அவர்களது படகையும் பறிமுதல் செய்தனர்.
அதனையடுத்து, இருநாடுகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, மாலத்தீவு அரசு மீனவர்களை விடுவிக்க முன்வந்தது. ஆனால் படகை விடுவிக்க மறுப்பு தெரிவித்து, மாலத்தீவு எல்லைக்குள் மீன்பிடித்ததாக 2 லட்சம் ரூபியா (மாலத்தீவு நாட்டின் பணமதிப்பு), வலை உபயோகித்து மீன் பிடித்ததாக 20 லட்சம் ரூபியா, உரிமம் இல்லாமல் அந்நாட்டு கடல் பகுதியில் இருந்ததற்காக 20 லட்சம் ரூபியா என அபராதம் விதித்தது.
இந்திய பண மதிப்பின் படி, 2 கோடியே 27 லட்சத்து 43 ஆயிரத்து 190 ரூபாய் அபராதம் கட்டிய பிறகு தான் படகை விடுவிக்க முடியும் என்று மாலத்தீவு அரசு தெரிவித்தது. பின்னர், பல கட்டமாக நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு, கடந்த நவம்பர் 11ஆம் தேதி 8 மீனவர்களை மட்டும் மாலத்தீவில் இருந்து நாடு திரும்பினர்.