தமிழ்நாடு

tamil nadu

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா..! வேடமிடுபவர்களுக்கு புது ரூல்சு! மாவட்ட எஸ்.பி அதிரடி உத்தரவு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 7, 2023, 8:45 PM IST

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவில் பக்தர்கள் சாதி ரீதியான அடையாளங்களையும், போலீஸ் சீருடை ஆகிய வேடங்கள் அணிவதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளதாக, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்து உள்ளார்.

strict restrictions for devotees in Kulasekarapattinam Mutharamman Temple Dussehra Festival thoothukudi sp announceed
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாற்கான கட்டுப்பாடுகளை அறிவித்த் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாற்கான கட்டுப்பாடுகளை அறிவித்த் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

தூத்துக்குடி:குலசேகரன்பட்டினத்தில் இந்த ஆண்டு நடைபெறும் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா வரும் அக்டோபர் 15 ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்திருவிழாவை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன், கோயில் வளாகம் மற்றும் வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் உட்பட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அறநிலையத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மேலும், கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பையும், வசதியையும் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, “கோயிலுக்கு வரும் பக்தர்கள் வேல், சூலாயுதம், வாள் போன்ற உலோகத்திலான எந்த பொருட்களையும் கொண்டு வருதல் கூடாது.

கடவுள் சம்மந்தப்பட்ட படங்களை பக்தியோடு கொண்டு வருவதற்கோ அல்லது பயன்படுத்துவதற்கோ, பக்தி பாடல்களை இசைப்பதற்கோ, கடவுள் சம்மந்தப்பட்ட பனியன்கள் மற்றும் உடைகளை அணிந்து வருவதற்கோ எவ்வித தடையும் இல்லை. ஆனால் கடவுள் திருவிழாவில் சாதி சின்னங்களுடன் கூடிய கொடியோ, தொப்பி மற்றும் ரிப்பன்களையோ, சாதி ரீதியான உடைகளை அணிந்து வரவோ, காவல்துறையினரை போன்று சீருடை அணிந்து வேடமிட்டு வரவோ எந்த வித அனுமதியும் இல்லை.

அறுவறுக்கதக்க வகையில் நடந்து கொள்வதற்கோ, நடனம் ஆடுவதற்கோ, அதிக சத்தத்துடன் டிரம்ஸ் அடித்து ஒலி எழுப்பி சுற்று சூழலுக்கு பங்கம் ஏற்படுத்துவதற்கோ, சாதி சம்பந்தமான கோஷங்கள் மற்றும் இசை ஏற்படுத்தவோ எவ்வித அனுமதியும் கிடையாது என்பதை தெரிவித்து கொள்வதுடன், மீறினால் சட்டபடி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், திறந்த வாகனங்களில் அசாதாரண சூழலில் ஆட்களையோ அல்லது பக்தர்களையோ ஏற்றி வந்தால், அந்த வாகனத்தின் ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் புகைப்படம் எடுக்கப்பட்டு, அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுப்பதுடன் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும். கோயில் மற்றும் சுற்றியுள்ள கடற்கரை, வாகன நிறுத்தங்கள், சாலை சந்திப்புகள் ஆகிய இடங்களில் மறைவாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, குற்றவாளிகள் மற்றும் சமூக விரோதிகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணித்து சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வாகனங்களில் வந்து இறங்கி கடற்கரை சென்று கோயில் வந்து திரும்பி அவரவர் வாகனங்களுக்கு செல்லும் இடம் வரை சீருடை மற்றும் சாதராண உடைகள் அணிந்த ஆண், பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டு தீவிரமாக கண்காணித்து பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். பொதுமக்கள் மற்றும் இதர சிறு வியாபாரிகள் உரிய அனுமதியின்றி சாலையோரம் சட்ட விரோதமாக கடைகள் அமைத்து போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக வாகனங்கள் தேங்குகின்ற நிலையை ஏற்படுத்தினால் சம்மந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

காவல்துறை முன் அனுமதியின்றி திருவிழா சம்பந்தமாக கோயில் பகுதிகள் மற்றும் எந்த தனியார் அல்லது பொது இடத்திலும் ஒலி பெருக்கி பயன்படுத்தவோ, ஆபாசமான ஆடல்-பாடல் போன்ற சினிமா இசை நிகழ்ச்சிகள் நடத்தவோ எவ்வித அனுமதியும் இல்லை. மீறினால் சம்மந்தப்பட்ட இசைக்குழுவினர் மற்றும் அமைப்பாளர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

பக்தர்களை ஏற்றி வரும் தனியார் வாகன ஓட்டிகள் தற்காலிக வாகன நிறுத்தத்தில் குறுக்கு, நெடுக்காக வாகனங்களை நிறுத்தாமலும், வாகனத்தை சுற்றி கொட்டகை அமைக்காமலும், வாகனங்களை ஒழுங்காக சீரான முறையில் மற்ற வாகனங்கள் வந்து செல்ல இடமளித்து வாகனங்களை நிறுத்த வேண்டும்.

பக்தர்கள் தசரா குழுக்களாக வந்து முக்கிய சந்திப்புகளை கடக்கும் போது அவ்விடங்களில் அதிக நேரம் நிறுத்தி கொண்டு வாண வேடிக்கைகள் நடத்தவோ, நன்கொடை பெறவோ, இசைக்கருவிகளை இசைத்துக்கொண்டோ பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்த கூடாது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பக்தர்களின் வசதிக்காக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வாகன நிறுத்துமிடங்கள் அதிகமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும். அனைத்து பொதுமக்களும் தசரா பண்டிகையை மகிழ்ச்சியாகவும், சிறப்பாகவும் நடத்திட மாவட்ட நிர்வாகம், அறநிலையத்துறை மற்றும் காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஒன்றரை வயது குழந்தை கடத்தல்.. வெளியான சிசிடிவி காட்சிகள்!

ABOUT THE AUTHOR

...view details