தமிழ்நாடு

tamil nadu

மழை வெள்ள பாதிப்பு; தூத்துக்குடியில் 50க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் வடியாத வெள்ளநீர்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 2, 2024, 3:20 PM IST

Tuticorin Flood: தமிழகம் முழுவதும் அரையாண்டு விடுமுறைக்குப் பின்பு இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், தூத்துக்குடியில் மழை வெள்ள பாதிப்பால் 50க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் திறக்கப்படவில்லை.

Tuticorin Flood
மழை வெள்ள பாதிப்பால் தூத்துக்குடியில் 50க்கும் மேற்பட்ட பள்ளிகள் திறக்கப்படவில்லை

தூத்துக்குடி: வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த டிச.17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையினால், தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் முழுவதும் வெள்ளத்தால் ஸ்தம்பித்துப் போனது.

குறிப்பாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் கடும் சேதங்களை எதிர்கொண்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனிடையே தூத்துக்குடி மாவட்டத்தில் அரையாண்டு விடுமுறைக்குப் பின்பு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.

மாவட்டத்தில் உள்ள 1,873 அரசு தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகள் ஆகியவை இன்று திறக்கப்பட்டு, மாணவர்கள் பள்ளிக்கு வருகை தந்தனர். தூத்துக்குடி மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சி.வ.அரசு உயர்நிலைப் பள்ளியில் மழைநீர் இன்னும் வடியாமல் குளம்போல் தேங்கியுள்ளதால், அந்த பள்ளியில் பயிலும் 10, 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு மட்டுமே இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.

மழைநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால், இந்த மழைநீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், மழை வெள்ள பாதிப்பால் பல்வேறு தனியார் பள்ளிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. எனவே 50க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்படவில்லை. இதே போன்று ஒரு சில அரசுப் பள்ளிகளும் இன்று திறக்கப்படாமல் உள்ளது.

முன்னதாக, மழை வெள்ள பாதிப்பால் புத்தகம் மற்றும் நோட்டுகளை இழந்த மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதேபோன்று, மழை காரணமாக தடைபட்ட அரையாண்டுத் தேர்வுகள் நாளை முதல் துவங்கி நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஜப்பானில் அனைத்து வகையான சுனாமி எச்சரிக்கைகளும் வாபஸ்.. தொடர்ந்து உயரும் உயிரிழப்பு எண்ணிக்கை!

ABOUT THE AUTHOR

...view details