தமிழ்நாடு

tamil nadu

கோவில்பட்டியில் தனிநபர் குடோனில் மண்ணெண்ணெய் பதுக்கல்

By

Published : Jul 24, 2021, 6:12 PM IST

தூத்துக்குடி: கோவில்பட்டியில் தனிநபர் குடோனில் 27க்கும் மேற்பட்ட மண்ணெணெய் பேரல்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

kerosene
kerosene

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்கு 18 ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணெய்யை அரசு ஒதுக்கீடு செய்து வருகிறது. இதில் 5 ஆயிரம் லிட்டர் மண்ணெணெய் தனிநபர் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையெடுத்து தூத்துக்குடி மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் உதயசூரியன் ஆலோசனையின் பேரில், கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுஜித் ஆனந்த், உதவி ஆய்வாளர் ஆர்தர் ஜஸ்டின் ராஜ் தலைமையிலான காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கோவில்பட்டி மார்க்கெட் பகுதியில், மணி என்பவருக்கு சொந்தமான கடையில் 35 லிட்டர் கொள்ளவு கொண்ட 7 கேன்களில் மண்ணெண்ணெய் இருப்பது கண்டுடிபிடிக்கப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட மண்ணெண்ணெய்

இதையெடுத்து கடையில் இருந்த மணி, அவரது உறவினர் பாலமுருகன் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கருவாட்டுபேட்டை தெருவில் உள்ள ஒரு குடோனில் மண்ணெணெய் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையெடுத்து காவல் துறையினர் அங்கு சென்று பார்த்தபோது 27க்கும் மேற்பட்ட மண்ணெண்ணெய் பேரல்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

ரேஷன் கடைகளுக்கு சென்று ரேஷன் கார்டுகளுக்கு விநியோகம் செய்ய வேண்டிய மண்ணெண்ணெய் தனிநபர் குடோனுக்கு வந்தது அங்கிருந்தவர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதையெடுத்து காவல் துறையினர் கோவில்பட்டி கோட்டாட்சியர், தாலுகா அலுவலகம், வட்ட வழங்கல் பிரிவுக்கும், தூத்துக்குடியில் உள்ள உணவு பொருள் கடத்தல் தடுப்பு காவல் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

கைதானவர்கள்

பின்னர் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த மண்ணெணெய் பேரல்கள் தூத்துக்குடியில் உள்ள உணவு பொருள் கடத்தல் பிரிவு அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. கடை, குடோன் ஆகியவற்றிலிருந்து 5 ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய காவல் துறையினர் மணி, பாலமுருகன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

தூத்துக்குடியில் ஜூலை 20ஆம் தேதி இரவு அலுவலர்கள் சோதனை நடத்தி 12 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்த நிலையில் தற்பொழுது 5 ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணையை பறிமுதல் செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 1800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் - இருவர் கைது

ABOUT THE AUTHOR

...view details