கரோனா தொற்று பெரும்பாலானோரின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது. எத்தனை பேரிடர் வந்தாலும் மனிதநேயமும், மனிதாபிமானமும் தொடர்ந்து உயிர்ப்போடு இருப்பது மற்றும் மாறவில்லை. கரோனா வறுமை, பசி, அன்பு, மனிதத்தையும் கற்பித்துக்கொண்டிருக்கிறது. பொதுவாக இளமையில் அன்போடு அரவணைப்பும் ஆதரவையும் தந்து பெரியோர்களோடு வாழும் கூட்டுக்குடும்ப வாழ்க்கையானது பின்னாளில் பிள்ளைகள் பெரியவர்கள் ஆனதும் சற்று கசப்பது இயல்பில் நடக்கக் கூடிய ஒன்று.
இன்றைய காலகட்டத்தில் வயதான தாய் தந்தையை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடுவது இயல்பாகிவிட்டது. பெற்றோரை பராமரிப்பதில் இன்றைய இளம் தலைமுறை ஒரு சுமையாக கருதுகின்றனரோ என்ற பெரும் அச்சம் எழுந்துள்ளது. இதில், ஒரு சிலர் தாமாகவே முதியோர் இல்லத்தில் சேர்ந்து ஆதரவற்றோர் போல் தங்களது கடைசி காலத்தை கழிக்கின்றனர். இந்தச் சமூகம் எதை கற்றுக்கொடுக்கிறதோ அதனையே நாம் கற்பிக்கிறோம்.
அந்த வகையில், திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஆர்.சோயா தொண்டு நிறுவனம் பலரது வாழ்க்கைக்கு வெளிச்சமாக இருக்கிறது. கரோனா காலத்தில் ஆதரவற்று சாலைகளில் நிர்க்கதியாய் திரியும் முதியோரை மீட்டு அவர்களுக்கு உண்ண உணவும், உடையும், தங்க இடமும் அளித்து பாதுகாத்து வருகிறது. இந்த தொண்டு நிறுவனத்தின் அரவணைப்பில் பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள், இளம் பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர்.
இங்கு வசிக்கும் ஒவ்வொருவரின் சிரிப்பிற்கு பின்னால், மனதை ரணமாக்கும் வேதனை கதைகளும் ஒளிந்திருக்கின்றன. முகாமில் வசித்து வரும் கமலம் என்பவர் கூறுகையில், "சென்னையை பூர்விகமாக கொண்ட நான், பெற்ற மகளின் கொடுமை தாங்க முடியாமல் வீட்டை விட்டு வெளியேறினேன். மனதில் ரணத்தோடு சாலையில் திரிந்த எனக்கு, பசியை போக்க பணம் தேவைப்பட்டது. சாலையில் யாசகம் கேட்டு திரிந்த என்னை தொண்டு நிறுவன பராமரிப்பாளர்கள் இங்கு அழைத்து வந்து நல்லபடியாக கவனித்து வருகின்றனர்" என்றார்.
அவரவர் வேலைகளை அவர்களே செய்ய முயற்சி
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆர்.சோயா என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் நிறுவனர் சரவணன், பராமரிப்பாளர் அஸ்வதி கூறியதாவது, "ஆதரவற்றோருக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டும் என்பதே எங்களது முதன்மை குறிக்கோள். மிகவும் மோசமான நிலையில் இருந்தவர்களை கூட மீட்டு அவர்களுக்கு முடிதிருத்தம் செய்து, புத்தாடை வழங்கி தினசரி வாழ்க்கைக்கு பழக்கி வருகிறோம்.