தமிழ்நாடு

tamil nadu

ஆதரவற்றோருக்கு வாழ்வு தரும் ஆர்.சோயா தொண்டு நிறுவனம்!

By

Published : Sep 16, 2020, 3:19 PM IST

Updated : Sep 22, 2020, 2:52 PM IST

தூத்துக்குடி: பெற்ற குழந்தைகளே பெற்றோரை தவிக்கவிட்டு செல்லும் இந்த காலத்தில், ஆதரவற்ற நிலையில் நிர்க்கதியாய் இருக்கும் முதியோர் மற்றும் பெண்களை மீட்டு ஆர்.சோயா என்ற தொண்டு நிறுவனம் பலரது வாழ்க்கைக்கு வெளிச்சமாய் இருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஊரடங்கில் அவர்களது பாதுகாப்பு பற்றிய ஒரு தொகுப்பு இது...

r seya trust
r seya trust

கரோனா தொற்று பெரும்பாலானோரின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது. எத்தனை பேரிடர் வந்தாலும் மனிதநேயமும், மனிதாபிமானமும் தொடர்ந்து உயிர்ப்போடு இருப்பது மற்றும் மாறவில்லை. கரோனா வறுமை, பசி, அன்பு, மனிதத்தையும் கற்பித்துக்கொண்டிருக்கிறது. பொதுவாக இளமையில் அன்போடு அரவணைப்பும் ஆதரவையும் தந்து பெரியோர்களோடு வாழும் கூட்டுக்குடும்ப வாழ்க்கையானது பின்னாளில் பிள்ளைகள் பெரியவர்கள் ஆனதும் சற்று கசப்பது இயல்பில் நடக்கக் கூடிய ஒன்று.

இன்றைய காலகட்டத்தில் வயதான தாய் தந்தையை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடுவது இயல்பாகிவிட்டது. பெற்றோரை பராமரிப்பதில் இன்றைய இளம் தலைமுறை ஒரு சுமையாக கருதுகின்றனரோ என்ற பெரும் அச்சம் எழுந்துள்ளது. இதில், ஒரு சிலர் தாமாகவே முதியோர் இல்லத்தில் சேர்ந்து ஆதரவற்றோர் போல் தங்களது கடைசி காலத்தை கழிக்கின்றனர். இந்தச் சமூகம் எதை கற்றுக்கொடுக்கிறதோ அதனையே நாம் கற்பிக்கிறோம்.

புதிய சேலை வழங்கிய அஸ்வதி

அந்த வகையில், திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஆர்.சோயா தொண்டு நிறுவனம் பலரது வாழ்க்கைக்கு வெளிச்சமாக இருக்கிறது. கரோனா காலத்தில் ஆதரவற்று சாலைகளில் நிர்க்கதியாய் திரியும் முதியோரை மீட்டு அவர்களுக்கு உண்ண உணவும், உடையும், தங்க இடமும் அளித்து பாதுகாத்து வருகிறது. இந்த தொண்டு நிறுவனத்தின் அரவணைப்பில் பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள், இளம் பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர்.

குழந்தைகளுக்கு தனி இடம்

இங்கு வசிக்கும் ஒவ்வொருவரின் சிரிப்பிற்கு பின்னால், மனதை ரணமாக்கும் வேதனை கதைகளும் ஒளிந்திருக்கின்றன. முகாமில் வசித்து வரும் கமலம் என்பவர் கூறுகையில், "சென்னையை பூர்விகமாக கொண்ட நான், பெற்ற மகளின் கொடுமை தாங்க முடியாமல் வீட்டை விட்டு வெளியேறினேன். மனதில் ரணத்தோடு சாலையில் திரிந்த எனக்கு, பசியை போக்க பணம் தேவைப்பட்டது. சாலையில் யாசகம் கேட்டு திரிந்த என்னை தொண்டு நிறுவன பராமரிப்பாளர்கள் இங்கு அழைத்து வந்து நல்லபடியாக கவனித்து வருகின்றனர்" என்றார்.

மாநகராட்சி இடத்தில் வசிக்கும் முதியவர்கள்

அவரவர் வேலைகளை அவர்களே செய்ய முயற்சி

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆர்.சோயா என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் நிறுவனர் சரவணன், பராமரிப்பாளர் அஸ்வதி கூறியதாவது, "ஆதரவற்றோருக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டும் என்பதே எங்களது முதன்மை குறிக்கோள். மிகவும் மோசமான நிலையில் இருந்தவர்களை கூட மீட்டு அவர்களுக்கு முடிதிருத்தம் செய்து, புத்தாடை வழங்கி தினசரி வாழ்க்கைக்கு பழக்கி வருகிறோம்.

ஆதரவற்றோருக்கு வாழ்வு தரும் ஆர்.சோயா தொண்டு நிறுவனம்!

ஆழ் மனதிலுள்ள கவலையை போக்கும் கலை நிகழ்ச்சி

ஆதரவற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளவர்கள், நல்ல மனநிலையில் இருந்தும் சரியான அரவணைப்பின்றி கைவிடப்பட்டோர் என பல தரப்பினரும் தற்போது முகாம்களில் உள்ளனர். முடிந்தவரையில் அவரவர் வேலைகளை அவர்களே செய்வதற்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. வாரத்திற்கு ஒரு முறை இறைச்சி, மீன், உள்ளிட்ட சிறப்பு உணவுகளும் நகைச்சுவை நிகழ்ச்சி, நாட்டிய நிகழ்ச்சி, பாட்டுக் கச்சேரி உள்ளிட்டவைகளும் நடத்தப்படுகின்றன. கலை நிகழ்ச்சியின் மூலம் அவர்களது கவலைகள் மற்றும் இறுக்கமான மன நிலையை மாற்ற முயற்சிக்கிறோம்.

யாருமற்று இருக்கும் மூதாட்டி

சுயதொழில் பயிற்சி வகுப்புகள்

இதுதவிர மனநிலை மனோதத்துவ நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைகளும் நடத்தப்படுகின்றன. யாசகம் பெறும் நிலையை அடியோடு நிறுத்துவதற்காக, முகாமில் உள்ளவர்களுக்கு சுயதொழில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதன் மூலமாக பேப்பர் கப், பைகள் உள்ளிட்டவற்றை அவர்களே தயார் செய்து வழங்குகின்றனர். இதுபோன்று இன்னும் பல தொழிற்பயிற்சிகள் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

கடந்த 150 நாள்களுக்கும் மேலாக இந்த ஊரடங்கினால் முகாமில் இருப்பவர்களுக்கு பல்வேறு பகுதிகளிலிருந்தும் தேவையான அனைத்து உதவிகளையும் மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வலர்கள் மூலமாக பெறுவது மகிழ்ச்சி" என்றனர்.

இதையும் படிங்க:கிளிமாஞ்சாரோ சிகரம் தொட்ட வீரமங்கை!

Last Updated :Sep 22, 2020, 2:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details