தமிழ்நாடு

tamil nadu

8 மாத ஆண் குழந்தையை ரூ.3 லட்சத்துக்கு விற்ற தாய் - 6 பேர் மீது வழக்குப்பதிவு

By

Published : Sep 30, 2021, 2:03 PM IST

தூத்துக்குடியில் 8 மாத ஆண் குழந்தையை ரூ.3 லட்சத்துக்கு விற்ற தாய் உள்பட ஐந்து பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆண் குழந்தையை ரூ. 3 லட்சத்துக்கு விற்ற தாய்
ஆண் குழந்தையை ரூ. 3 லட்சத்துக்கு விற்ற தாய்

தூத்துக்குடி: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 38). இவருக்கும், தூத்துக்குடி கொத்தனார் காலனியைச் சேர்ந்த ஜெபமலர் (28) என்பவருக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.

கடந்த 8 மாதங்களுக்கு முன் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்தநிலையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜெபமலர் தனது கணவர் மணிகண்டனைப் பிரிந்து குழந்தையுடன் தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு மணிகண்டன் மனைவி மற்றும் குழந்தையைப் பார்ப்பதற்காக தூத்துக்குடி சென்றுள்ளார். அப்போது வீட்டில் குழந்தை இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து ஜெபமலரிடம் கேட்டபோது சரியாக பதில் கூறவில்லை என்று தெரிகிறது.

ரூ. 3 லட்சத்திற்கு விற்பனை

இதில் சந்தேகமடைந்த மணிகண்டன், அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்ததில், ஜெபமலர் தனது குழந்தையை விருதுநகரைச் சேர்ந்த ஜேசுதாஸ் என்பவர் மூலமாக தூத்துக்குடியைச் சேர்ந்த அந்தோணி, கிருபா, செல்வராஜ், டேனியல் ஆகியோரிடம் ரூ. 3 லட்சத்துக்கு விற்றது தெரியவந்தது.

குழந்தையின் தந்தை மணிகண்டன்

இதையடுத்து தனது குழந்தையை மீட்டுத் தரக் கோரி தூத்துக்குடி சிப்காட் காவல்நிலையத்தில் மணிகண்டன் புகார் அளித்தார். காவல்துறையினர் குழந்தையின் தாய் ஜெபமலர் உள்பட ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொய் கூறி மறுமணம்

இதுகுறித்து மணிகண்டன் கூறுகையில், "எனக்கு முதல் திருமணம் நடைபெற்று மனைவியை பிரிந்த நிலையில், இரண்டாவதாக ஜெபமலரை திருமண செய்தேன். அவரும் ஏற்கனவே கணவரை பிரிந்த நிலையில், எங்களுக்குள் மனமொத்து திருமணம் செய்து கொண்டோம்.

முன்னதாக அவர், தான் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவள் என பொய் சொல்லிதான் என்னை திருமணம் செய்து கொண்டார். இது எனக்கு திருமணத்திற்கு பின்னரே தெரியவந்தது. ஜெபமலருக்கு நள்ளிரவு நேரத்திலும் செல்போன் அழைப்புகள் வந்ததால் எங்களுக்குள் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதன்காரணமாக இருவரும் பிரிந்து ஜெபமலர் தூத்துக்குடியில் வசித்துவந்தார். குழந்தையை பார்ப்பதற்காக நான் இங்கு வந்தபோது தான் ஜெபமலர் குழந்தையை விற்றது தெரிய வந்தது.

காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளேன், என் குழந்தையை மீட்காமல் ஊருக்கு செல்லமாட்டேன்" என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இதையும் படிங்க:பூண்டி மாதா சிலை உடைப்பு: திருவள்ளூரில் பதற்றம்

ABOUT THE AUTHOR

...view details