தமிழ்நாடு

tamil nadu

திருச்செந்தூர் விரைவு ரயிலில் சிக்கியுள்ள பயணிகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் சென்றடைந்தன!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 19, 2023, 1:52 PM IST

Srivaikuntam Railway Station: ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இரண்டு நாட்களாக உணவின்றி தவித்து வந்த ரயில் பயணிகளுக்கு இன்று ஹெலிகாப்டர் மூலம் உணவுகள் வழங்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் விரைவு ரயிலில் சிக்கியுள்ள பயணிகளுக்கு தண்ணீர் மற்றும் உணவுகள் சென்றடைந்தன
திருச்செந்தூர் விரைவு ரயிலில் சிக்கியுள்ள பயணிகளுக்கு தண்ணீர் மற்றும் உணவுகள் சென்றடைந்தன

தூத்துக்குடி:கடந்த இரண்டு நாட்களாக வெள்ளத்தின் நடுவே சிக்கியுள்ள திருச்செந்தூர் விரைவு ரயிலில் தவித்து வரும் பயணிகளுக்கான உணவுப் பொருட்கள் மற்றும் தண்ணீர் போன்றவை, இன்று ஹெலிகாப்டர் மூலம் கொண்டு வரப்பட்டு வழங்கப்பட்டது.

திருச்செந்தூர் - சென்னை இடையே இயக்கப்படும் விரைவு ரயில் கனமழை காரணமாக ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கியுள்ளது. இதில் பயணித்த 800 பயணிகளில் சுமார் 300 பேர் படகுகள் மூலம் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மண்டபம் மற்றும் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், பலரை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்நிலையில் மூன்று நாட்களாக உணவு, தண்ணீர் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் பயணிகள் தவித்து வந்தனர். ரயிலில் குழந்தைகள் முதியவர்கள் என பலர் சிக்கியுள்ள நிலையில், குழந்தைகளுக்காவது உணவுகள் வழங்கப்பட வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்திருந்தனர்.

இதையும் படிங்க: "குழந்தைகளுக்காவது உணவு கொடுங்கள்" ரயிலில் சிக்கிய 500 பேர் தவிப்பு.. மீட்பு நிலவரம் என்ன?

இந்நிலையில், இரண்டு நாட்களுக்குப் பிறகு இன்று சுமார் 11.30 மணி அளவில் இந்திய விமானப்படையின் மூன்றாவது ஹெலிகாப்டர் மூலம் உணவு மற்றும் தண்ணீர் ஆகிய அத்தியாவசியப் பொருட்கள் ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. குழந்தைகள் மற்றும் பயணிகளுக்குத் தேவையான ரொட்டி, சாதம், ஊறுகாய், குளிர்பானம், தண்ணீர் பாட்டில்கள் ஆகியவை வழங்கப்பட்டன.

இந்த உணவுகளை ரயில்வே பாதுகாப்புப் படை ஊழியர்கள் பயணிகளுக்குச் சென்று வழங்கினர். மேலும், மீட்கப்பட்ட 300 பயணிகள் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு அப்பகுதியில் உள்ள கிராம மக்களின் உதவியுடன் உணவு வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: TN South Flood Live Update: தூத்துக்குடியில் ஈபிஎஸ் ஆய்வு

ABOUT THE AUTHOR

...view details