தமிழ்நாடு

tamil nadu

மாற்றுத்திறனாளியை ஆட்டோ ஓட்ட விடாமல் தடுக்கும் கும்பல்.. வேதனையுடன் டிஎஸ்பி அலுவலகத்தில் புகார்!

By

Published : Jul 14, 2023, 10:30 PM IST

Updated : Jul 15, 2023, 3:24 PM IST

கோவில்பட்டியில் மாற்றுத்திறனாளி ஆட்டோ ஓட்டுநர்களை ஆட்டோக்களை இயக்கவிடமால் தடுப்பதால், தங்களது வாழ்வாதாரத்தை இழந்து பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளதாக மாற்றுத்திறனாளி ஓட்டுநர்கள் வேதனையுடன் டிஎஸ்பியிடம் புகார் அளித்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

தூத்துக்குடி:கோவில்பட்டி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல்(36). லாரி ஓட்டுநராக இருந்தபோது, விபத்து ஒன்றில் தனது இடது கையை இழந்த சக்திவேல் தற்போது மாற்றுத்திறனாளியாக தன்னம்பிக்கையுடன் ஆட்டோ ஓட்டி தனது குடும்பத்திற்கான வாழ்வாதாரத்தை ஈட்டி வந்தார். மேலும் வலது கையிலும் உள்ள சிறு பாதிப்பு பாதிப்புள்ளது. தனது மனைவியை இழந்து தவிக்கும் இவருக்கு 2 பெண் குழந்தைகளை பல போராட்டங்களுக்கு நடுவே வளர்க்க வேண்டிய நிலைமையில் உள்ளார்.

இதே போன்று, லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(60). இவரும் விபத்தில் ஒரு கால் இழந்து மாற்றுத்திறனாளியான போதிலும் தன்னம்பிக்கையுடன் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். இதனிடையே சக்திவேல், ராமகிருஷ்ணன் இருவரும் கோவில்பட்டி புதிய பேருந்து நிலையம் எதிரே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சர்வீஸ் சாலை பகுதியில் நின்று வெளியூரில் இருந்து வரும் பயணிகளை சவாரி ஏற்றி தங்களது பிழைப்பினை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பயணிகளை ஏற்றி, இறங்கிவிடுவதால் விபத்து அதிகரித்து வந்த காரணத்தினால் தற்போது தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றி, இறக்கிவிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், வெளியூரில் இருந்து வரக்கூடிய ஆம்னி பஸ்கள், அரசு விரைவு பேருந்துகள் மேம்பாலத்தின் கீழ் வழியாக சர்வீஸ் சாலைக்கு செல்கின்றன. இதனால் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் இளையரசனேந்தல் சாலையில் பயணிகளை ஏற்றி, இறங்கி செல்கின்றனர். இதையெடுத்து அப்பகுதியில் நின்று சக்திவேல், ராமகிருஷ்ணன் இருவரும் பயணிகளை ஆட்டோவில் ஏற்றி இறங்கி விட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பேருந்து நிலையத்தில் ஆட்டோ வைத்திருப்பவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது மட்டுமின்றி தங்களது சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்தால் மட்டுமே ஆட்டோ ஓட்ட முடியும் என்று கூறியதால் இருவரும் 5 ஆயிரம் கொடுத்து உறுப்பினராகி உள்ளனர். இருந்த போதிலும், மாற்றுத்திறனாளிகள் இருவரையும் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள சில ஆட்டோ ஓட்டுநர்கள் இயக்கவிடமால் தடுத்து வருகின்றனர். இது மட்டுமின்றி, காவல்துறையினரை வைத்து இருவரையும் ஆட்டோவை ஓட்டவிடாமலும் தடுத்து உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் மாற்றுத்திறனாளிகள் சக்திவேல், ராமகிருஷ்ணன் இருவரும் ஆட்டோ ஓட்டி தங்களது பிழைப்பினை நடத்தமுடியமால் பரிதவித்து வருகின்றனர். மாற்றுத்திறனாளிகளான தங்களுக்கு இந்த ஆட்டோ ஓட்டி கிடைக்கும் சொற்ப வருமானத்தில் தான் தங்களது குடும்பத்தினை நடத்தி வருவதாகவும், இதனை புதிய பேருந்து நிலையத்தில் உள்ள சிலர் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் என்ற பெயரில் தடுப்பதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், தங்கள் வருமானத்தினை இழந்து நடுத்தெருவில் நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், அவர்களுடன் இணைந்து மேற்கு காவல் நிலைய போலீசாரும் தங்களை ஆட்டோவை ஓட்ட விடமால் மிரட்டுவதால் பிழைக்க என்ன செய்வது? என்று தெரியமால் கோவில்பட்டி டி.எஸ்.பி. வெங்கடேஷிடம் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி மனு கொடுத்துள்ளனர்.

மேலும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.எஸ்.பி. உறுதியளித்துள்ளதாக அவ்விருவரும் தெரிவித்துள்ளனர். தாங்கள் ஆட்டோ ஓட்டினால் தான் தங்களுடைய குடும்பத்தினை கவனிக்க முடியம் என்று மாற்றுத்திறனாளி ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: விளங்காத அதிமுக அரசு - விடியா திமுக அரசு: ஈரோடு மன்றக் கூட்டத்தில் உச்சகட்ட மோதல்!

Last Updated :Jul 15, 2023, 3:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details