தமிழ்நாடு

tamil nadu

இறந்தும் உயிர் வாழும் ஆசிரியர்.. மூளைச்சாவு அடைந்ததால் உடல் உறுப்புகள் தானம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 23, 2023, 8:04 AM IST

Thoothukudi Teacher organ donation: திருச்செந்தூர் அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த தனியார் பள்ளி ஆசிரியரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இதையடுத்து அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

Respect to the teacher's body on behalf of the government
ஆசிரியரின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை

ஆசிரியரின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை

தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே உள்ள கீழநாலுமூலைக்கிணறு பகுதியைச் சேர்ந்த தங்கபெருமாள் மகன், சதீஷ்குமார் (33). இவர் பணிக்கநாடார் குடியிருப்பில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி 6 மாத ஆண் குழந்தை உள்ளது.

வழக்கமாக பள்ளிக்கு பள்ளி வாகனத்தில் சென்று வருவார். இந்நிலையில், கடந்த நவம்பர் 20ஆம் தேதி மாலையில், தனது இருசக்கர வாகனத்தில் பள்ளியிலிருந்து பரமன்குறிச்சி வழியாக வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்துள்ளார். அப்போது, நடுநாலுமூலைக்கிணறு அருகில் வரும்போது மாடு குறுக்கே வந்ததால், நிலைதடுமாறி ஆசிரியர் சதீஷ்குமார் சாலையில் கீழே விழுந்து, தலையில் பலத்த காயமடைந்துள்ளார். இதனையடுத்து, அவரை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவனைக்கும், மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சேர்த்துள்ளனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சாலை விபத்தில் தலையில் பலத்த காயமடைந்ததால் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு, மூளை செயலிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவரது குடும்பத்தினர் மிகுந்த சோகத்திலும் சதீஷ்குமாரின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முடிவு செய்துள்ளனர். தொடர்ந்து, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று காலை அவரது உடல் உறுப்புகளான இதயம், கண்கள், நுரையீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது.

அவரது இதயம் மதுரையிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதனையடுத்து, சதீஷ்குமார் உடலுக்கு திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் ரேவதி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து, சதீஷ்குமாரின் உடல் சொந்த ஊரான கீழ நாலுமூலைக்கிணறு மயானத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அரசு சார்பில் மாவட்ட அரசு வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனையடுத்து திருச்செந்தூர் வட்டாட்சியர் வாமணன், டிஎஸ்பி வசந்தராஜ், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் ஊர் பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஆசிரியர் சதீஷ்குமாரின் இறப்பு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:சேலம் அரசு மருத்துவமனையில் தீவிபத்து.. சிகிச்சை பெற்ற நோயாளி திடீர் உயிரிழப்பு! உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details