தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் உள்ள மகப்பேறு பிரிவில், நேற்று இரவு பத்மாவதி என்ற தற்காலிக பணியாளர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த கோவில்பட்டி ஸ்டாலின் காலனியைச் சேர்ந்த காளிராஜ் (24) என்பவர், மது போதையில் பத்மாவதியிடம் உள்ளே செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.
கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் தற்காலிக பெண் பாதுகாவலர் மீது கொலை வெறி தாக்குதல்!
Published : Nov 26, 2023, 8:46 AM IST
Attack on temporary female security guard at Kovilpatti: பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தற்காலிக பெண் பணியாளரை தாக்கிய மதுபோதையில் இருந்த நபரை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஆனால், “தற்போது உள்ளே சென்று யாரையும் பார்க்க முடியாது. பார்வையாளர்கள் நேரத்தில்தான் பார்க்க முடியும்” என்று பத்மாவதி கூறியுள்ளார். இதனை ஏற்றுக் கொள்ளாத காளிராஜ், அதையும் மீறி உள்ளே செல்ல முயன்றபோது பத்மாவதி தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காளிராஜ், பத்மாவதி மீது தாக்குதல் நடத்தி உள்ளார். மேலும், அவரது கழுத்தை நெரித்து தாக்கியுள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில் அருகில் இருந்தவர்கள் சத்தம் போடவே, காளிராஜ் அங்கிருந்து வெளியே சென்றதாகக் கூறப்படுகிறது. இது குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, காளிராஜை கைது செய்துள்ளனர். இந்நிலையில், மது போதையில் எங்கு செல்கிறோம் என்று தெரியாமல், அரசு மருத்துவமனைக்குச் சென்று காளி ராஜ் பிரச்சனையில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் காளிராஜ், பத்மாவதி மீது தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.