தமிழ்நாடு

tamil nadu

50 ஆண்டுகளுக்கு முன்பு திருட்டு.. திருவாரூர் சிலை அமெரிக்காவில் மீட்பு!

By

Published : Nov 15, 2022, 3:19 PM IST

திருவாரூர் விஸ்வநாத சுவாமி கோயிலில் 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோன 9 சிலைகளையும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

திருவாரூரில் திருடப்பட்ட சிலைகள் 50 ஆண்டுகளுக்கு பின் அமெரிக்காவில் மீட்பு
திருவாரூரில் திருடப்பட்ட சிலைகள் 50 ஆண்டுகளுக்கு பின் அமெரிக்காவில் மீட்பு

திருவாரூர்: ஆலத்தூர் விஸ்வநாத சுவாமி கோயிலில் இருந்து 50 ஆண்டுகளுக்கு முன்பு மூன்று பழங்கால உலோக சிலைகள் திருடப்பட்டதாக இந்து சமய அறநிலையத்துறை விக்ரபாண்டியம் காவல் நிலையத்தில் கடந்த 2017-ம் ஆண்டு புகார் அளித்தனர். இந்த வழக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது, கோயிலில் இருந்த விஷ்ணு, தேவி, பூதேவி, யோக நரசிம்மர், விநாயகர், நடன சம்பந்தர், சோமாஸ்கந்தர், நின்ற விஷ்ணு, நடனம் கிருஷ்ணா ஆகிய 9 சிலைகளும் திருடப்பட்டு போலியான சிலைகள் வைக்கப்பட்டிருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் பாண்டிச்சேரி பிரெஞ்சு இன்ஸ்டியூட் மூலமாக, திருடப்பட்ட சிலைகளின் புகைப்படத்தை பெற்று, அதை ஒப்பிட்டு உலகெங்கிலும் உள்ள அருங்காட்சியகம் மற்றும் ஏல மையங்களில் இணையதளம் வாயிலாக ஆய்வு மேற்கொண்டனர்.

இதனையடுத்து அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் திருடப்பட்ட விஷ்னு, தேவி, பூதேவி ஆகிய சிலைகள் இருப்பதையும், அமெரிக்கா மிசோரி மாகாணத்தில் கன்சாஸ் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் யோக நரசிம்மர், விநாயகர் சிலைகளை இருப்பதையும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

மேலும், அமெரிக்கா வாஷிங்டன் டி.சியில் உள்ள பிரியர் சாக்லர் அருங்காட்சியத்தில் சோமஸ்கந்தர் சிலையும், கிறிஸ்டிஸ்.காம் இணையத்தில் நடன சம்பந்தர் சிலைகள் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

இதுமட்டுமின்றி அமெரிக்கா நியூயார்க்கில் உள்ள மெட்ரோபாலிட்டன் மியூசியம் ஆப் ஆர்ட்டின் இணையதளத்திலும், அமெரிக்கா கிறிஸ்டியின் இணையதளத்திலும் நடனமாடும் கிருஷ்ணா மற்றும் நிற்கும் விஷ்ணு ஆகிய இரண்டு பழங்கால சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

இதனையடுத்து அமெரிக்காவில் உள்ள இரு சிலைகளை தமிழ்நாட்டிற்கு கொண்டு வர உரிய ஆவணங்களை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் தமிழ்நாடு அரசிடம் சமர்பித்துள்ளனர்.

யுனெஸ்கோ ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஏற்கனவே அமெரிக்கா அருங்காட்சியத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 7 சிலைகள், தற்போது அமெரிக்காவின் அருங்காட்சியகங்களில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு சிலைகள் என மொத்தம் 9 சிலைகளை உடனடியாக தமிழ்நாட்டிற்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:திருச்சியில் 21 கிலோ கஞ்சா பறிமுதல்... கஞ்சா வியாபாரி கைது

ABOUT THE AUTHOR

...view details