தமிழ்நாடு

tamil nadu

இந்திய அணிக்காக ஆட வேண்டும்... ஆனால், பயிற்சி செய்ய மைதானம் இல்லை...!

By

Published : Sep 1, 2020, 10:31 PM IST

Updated : Sep 19, 2020, 5:52 PM IST

திருவாரூர்: கால்பந்தில் இந்தப் பள்ளி அடைந்திருக்கும் வளர்ச்சி ஒரே நாளிலோ, ஒரே வருடத்திலோ கிடைத்துவிடவில்லை. கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படிக்கும் இந்தப் பள்ளியில், 2012ஆம் ஆண்டுக்கு முன் உடற்பயிற்சி ஆசிரியரே இல்லை.

Thiruvarur Govt School students requesting TN gvt to set up a football ground
Thiruvarur Govt School students requesting TN gvt to set up a football ground

40 ஆண்டுகளுக்கு பிறகு 2012ஆம் ஆண்டு தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணி சந்தோஷ் டிராபி இறுதிப் போட்டிக்கும், 2014, 2016 ஆகிய ஆண்டுகளில் அரையிறுதிப் போட்டிக்கும் முன்னேறியது. தமிழ்நாடு ஆடவர் கால்பந்து அணியைப் பற்றியே நினைவில் கொள்ளாத அனைவருக்கும், மகளிர் அணியின் வெற்றிகளை நினைவில் வைத்துக்கொள்வது கடினம் தான்.

2019-20ஆம் ஆண்டுக்கான இந்திய மகளிர் கால்பந்து லீக் போட்டிகளில் கேரளா கோகுலம் அணி வெற்றிபெற்றது. அதில் ஆடிய பெரும்பாலான வீராங்கனைகள் அம்மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. ஆனால் அதே தொடரில் தமிழ்நாடு சார்பாக பங்கேற்றிருந்த சேது கிளப் அணியில் அனைவருமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தான்.

சமீபத்திய தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணியின் செயல்பாடுகளை கவனித்தவர்களுக்கு அவர்களின் வளர்ச்சி நிச்சயம் தெரியும். மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டு பார்த்தால், மகளிர் கால்பந்திற்காக தயாராகும் தமிழ்நாடு வீராங்கனைகள் பலரும் புல்தரையில் ஆடி பயிற்சி இல்லாதவர்கள். இதுதான் நமது வீராங்கனைகள் தேசிய அளவிலான போட்டிகளில் கடைசி நேரத்தில் அடையும் தோல்விகளுக்குக் காரணம்.

பயிற்சியாளர் முத்துக்குமாரின் கீழ் பயிற்சிபெறும் மாணவிகள்

இதே மைதானம் தொடர்பான பிரச்னையை தான் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள சவளக்காரன் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகளும் எதிர்கொண்டு வருகிறார்கள். சமீபத்தில் முடிந்த மாவட்ட அளவிலான கால்பந்து போட்டிகளில் முதலிடம், முதலமைச்சர் கோப்பையில் தமிழ்நாடு அளவில் மூன்றாம் இடம், பிரதமர் கோப்பையில் மூன்றாம் இடம், பீச் கால்பந்து தொடரில் முதலிடம் என வெற்றிபெற்று அப்பள்ளியின் கால்பந்து அணி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

சவளக்காரம் அரசுப்பள்ளி மாணவிகள்

தேசிய அளவிலான தொடரில் தமிழ்நாடு முழுவதும் பங்கேற்றிருந்த தனியார் பள்ளிகளை வீழ்த்தி மூன்றாம் இடத்தை அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளை கொண்ட அணி வென்று பலரது பாராட்டுக்களைப் பெற்றது. இந்த அணியிலிருந்து நான்கு மாணவிகள் இப்போது தேசிய ஜூனியர் அணியில் இடம்பெற்றுள்ளார்கள்.

கால்பந்தில் இந்தப் பள்ளி அடைந்திருக்கும் வளர்ச்சி ஒரே நாளிலோ, ஒரே வருடத்திலோ கிடைத்துவிடவில்லை. கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படிக்கும் இந்தப் பள்ளியில், 2012ஆம் ஆண்டுக்கு முன் உடற்பயிற்சி ஆசிரியரே இல்லை. அதன் பிறகு பகுதிநேர உடற்பயிற்சி ஆசிரியராக முத்துக்குமார் என்பவர் வந்துள்ளார்.

பயிற்சிக்கு தயாராகும் மாணவிகள்

உடற்பயிற்சி ஆசிரியராக வந்தவர் மாணவர்களின் திறனை கண்டறிந்து அவருக்கு பிடித்த கால்பந்து பயிற்சியை அவர்களுக்கு கொடுத்துள்ளார். நாளாக நாளாக மாணவிகளின் ஆர்வமும், விளையாடும் திறனும் அதிகரித்துக் கொண்டே சென்றுள்ளது.

இதனைக் கண்ட அக்கிராம மக்களும், இளைஞர் நற்பணி மன்றத்தினரும் இணைந்து அந்த மாணவ-மாணவிகளுக்காக ஒரு ஏக்கர் தரிசு நிலத்தை மைதானமாக மாற்றியுள்ளனர். போதிய வசதிகள் இல்லையென்றாலும் பயிற்சியை மாணவ - மாணவிகள் அதே நிலத்தில் தொடர்ந்துள்ளனர்.

பயிற்சி செய்ய மைதானம் இல்லை: கோரிக்கை விடுக்கும் மாணவிகள்

இந்த மைதானத்தில் பயிற்சி பெற்று தேசிய அளவிலான கால்பந்து போட்டிகளில் பங்கேற்று 5 மாணவிகள் விளையாட்டுத் துறை இட ஒதுக்கீட்டின் கீழ் தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றி வருகின்றனர்.

9ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றதால், அவர்களின் ஜூனியர்களும் இப்போது கால்பந்து பயிற்சியில் அதீத ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார்கள்.

2012ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை பத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் இந்தப் பள்ளியிலிருந்து தேசிய அணியில் இடம்பெற்றுவிட்டார்கள். ஆனால் இன்று வரை இவர்களுக்கு பயிற்சி செய்ய எந்தவொரு மைதானமும் இல்லை. அதிலும் மழைக்காலங்களில் நிலம் முழுவதும் நீரால் நிரம்பிவிடுகிறது.

60க்கும் மேற்பட்ட மாணவர்கள் கால்பந்து பயிற்சி பெற வந்தாலும், மைதானத்தில் இடப்பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் பல மாணவர்கள் மைதானத்திற்கு வெளியே அமர்ந்து மற்றவர்கள் விளையாடுவதைப் பார்க்க வேண்டிய சூழலே நிலவுகிறது.

தேசிய அணியில் இடம்பிடித்த மாணவிகள்

ஆனாலும் மாணவ-மாணவிகளின் பயிற்சி தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது. டெல்லி, ஹரியானா, மகாராஷ்டிரா, மணிப்பூர், பெங்களூரு, கோவா உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு சென்று தேசிய அளவிலான கால்பந்து போட்டிகளில் பங்கேற்று பல சான்றிதழ்களையும் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களையும் வாங்கியுள்ளதாகக் கூறும், தேசிய அணியில் இடம்பிடித்துள்ள மாணவிகள், தற்போது கால்பந்து போட்டிகளுக்கான அறிவிப்பு வந்தால் தாங்கள் பயிற்சி எடுக்க இடவசதி இல்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்திய கால்பந்து அணியில் இடம்பிடிப்பதையே இலக்காகக் கொண்டு பயிற்சி எடுத்து வரும் இந்த மாணவிகளுக்கு, தமிழ்நாடு அரசு கால்பந்து மைதானம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதே கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க:நம்பிக்கை மனிதி: பூரண சுந்தரி ஐஏஎஸ்...!

Last Updated :Sep 19, 2020, 5:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details