தமிழ்நாடு

tamil nadu

திருவாரூரில் 3 அதிகாரிகள் வீட்டில் அதிரடி சோதனை.. முக்கிய ஆவணம் சிக்கியதாக லஞ்ச ஒழிப்புதுறை தகவல்!

By

Published : Apr 28, 2023, 1:27 PM IST

Updated : Apr 28, 2023, 1:51 PM IST

சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் உட்பட 3 அரசு அலுவலர்கள் வீட்டில் ஊழல் தொடர்பாக 12 மணி நேரம் சோதனை நடத்தியதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக என லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

anti corruption
லஞ்ச ஒழிப்புதுறை தகவல்!

3 அரசு அலுவலர்கள் வீட்டில் சோதனை

திருவாரூர்: விழுப்புரம் சர்க்கரை ஆலையின் மேலாண் இயக்குநராக இருப்பவர் முத்து மீனாட்சி. இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை திருவாரூர் வருவாய்க் கோட்டாட்சியராகப் பணி புரிந்தார். அப்போது நத்தம் புறம்போக்கு இடத்தில் வீட்டு மனை பட்டா வழங்கியுள்ளார்.

பின்னர் அதே இடத்தை நெடுஞ்சாலைத்துறை விரிவாக்க பணிக்காக மீண்டும் அரசிடமே நல்ல விலைக்கு வழங்கி முறைகேடு நடைபெற்றதாகப் புகார்கள் எழுந்துள்ளது. தற்போது அந்த புகாரின் அடிப்படையில் திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் முத்து மீனாட்சி, நில எடுப்பு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, கிராம நிர்வாக அலுவலர் துர்கா ராணி, உதவியாளர் கார்த்தி மற்றும் அடியக்கமங்கலம் பகுதியைச் சார்ந்த முருகன், முல்லையம்மாள், குமார், சுகுமார், சிவகுமார், சதீஷ்குமார், வினோத்குமார், கடலூர் சேர்ந்த சுகுமாரி ஆகிய 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அதன் அடிப்படையில் திருவாரூர் ஜி.ஆர்.டி கார்டனில் உள்ள முத்து மீனாட்சியின் வீட்டில் இருபதுக்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த இலவச வீட்டு மனை பட்டா வழங்கியதில் நடைபெற்ற முறைகேட்டிற்கு உதவியாக இருந்ததாகக் கூறி, அப்போதைய அடியக்கமங்கலம் கிராம நிர்வாக அலுவலரும், தற்போதைய விளமல் கிராம நிர்வாக அலுவலருமான துர்கா ராணி என்பவர் வசித்து வரும் விளமல் சிவன் கோயில் நகரில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடத்தினர்.

மேலும் அதைத் தொடர்ந்து அடியக்கமங்கலம் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் கார்த்தி என்பவரின் அடியக்கமங்கலத்தில் உள்ள அவரது வீட்டிலும், தஞ்சாவூரில் உள்ள நில எடுப்பு பிரிவு மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை என்பவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் திருவாரூர் வருவாய் கோட்டாட்சியராக பணிபுரிந்த விழுப்புரம் சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் முத்து மீனாட்சி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர் ஆகியோரது வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டிருப்பது திருவாரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கடந்த 12 மணி நேரமாக நடைபெற்று வந்த சோதனை தற்போது நிறைவு பெற்றுள்ளது எனவும், இந்த சோதனையில் முத்து மீனாட்சி மற்றும் துர்கா ராணி மற்றும் கார்த்திக் ஆகியோரது வீடுகளில், இந்த வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிலவற்றைக் கைப்பற்றப் பட்டுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: உணவு கழக பெண் ஊழியர் கொலையில் திடீர் திருப்பம்.. 8 ஆண்டுகளுக்கு பிறகு காவல்துறை அதிரடி!

Last Updated :Apr 28, 2023, 1:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details