தமிழ்நாடு

tamil nadu

திருவண்ணாமலை கிரிவலப்பாதையை சுத்தம் செய்த அமைச்சர் எ.வ.வேலு - ஏற்பாடுகள் தீவிரம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 21, 2023, 2:17 PM IST

Thiruvannamalai Girivalam: தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திருவண்ணாமலை கிரிவலப்பாதையை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தும், குப்பைகளை அகற்றியும் தூய்மைப் பணியை மேற்கொண்டார்.

Etv Bharat
Etv Bharat

திருவண்ணாமலை கிரிவலப்பாதையை தண்ணீர் ஊற்றி, குப்பைகளை அகற்றி சுத்தம் செய்த அமைச்சர் எ.வ.வேலு

திருவண்ணாமலை:திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, கிரிவலப்பாதை முழுவதும் சுத்தம் செய்யும் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, செங்கம் சாலை கிரிவலப்பாதை சந்திப்பில் தொடங்கிய தூய்மை செய்யும் பணிகள், கிரிவலப்பாதை முழுவதும் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், இன்று (நவ.21) பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு தூய்மைப் பணிகளை மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் எ.வ.வேலு கூறுகையில், “திருவண்ணாமலையில் 10 நாட்கள் திருக்கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற்று வருகிறது.

உலகம் முழுவதும் இருந்தும் பல்வேறு மாவட்டம், பல்வேறு மாநிலத்தில் இருந்தும், குறிப்பாக ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா போன்ற மாநிலத்தில் இருந்தும் 50 சதவீத பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவதாகவும், வரும் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

குறிப்பாக, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலை நகரை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பதால் 'தூய்மை' என்ற அமைப்பை உருவாக்கி, வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நகரம் முழுவதும் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், தற்போது திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு கிரிவலப்பாதை முழுவதும் வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை, நகராட்சித் துறை, நெடுஞ்சாலைத் துறை, அறநிலையத்துறை மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும், வரும் பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்ளும் 14 கிலோ மீட்டர் நடைபாதை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோப்பு தண்ணீர் பயன்படுத்தி சுத்தம் செய்யப்படுவதாகவும், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பக்தர்கள் அதிகளவு வருவார்கள் என்பதால், அனைத்து பணிகளும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார்.

கடந்த ஆண்டு பல்வேறு இடங்களில் கழிப்பிடத்தில் தண்ணீர் குறைபாடு இருந்ததாக வந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, கிரிவலப்பாதை 8 கிலோ மீட்டர் தொலைவிற்கு பைப் லைன் அமைத்து, 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டி கட்டி, தண்ணீர் பற்றாக்குறையை நீக்கி உள்ளதாகவும், குறிப்பாக 90 லட்சம் ரூபாய் செலவில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும், கிரிவலப்பாதையில் இரவு நேரங்களில் பல இடங்களில் மின் விளக்குகள் எரியாமல் இருப்பதாக புகார் வந்ததைத் தொடர்ந்து, எந்த பகுதியில் மின் விளக்குகள் இல்லாமல் உள்ளதோ, அந்த இடத்தில் மின் விளக்குகள் பொருத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் அனைத்து அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் இருப்பதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

இதையும் படிங்க:தென்காசி அருகே 22 ஆண்டுகளாக அடிப்படை வசதியின்றி தவிக்கும் சுப்பிரமணியபுரம்.. பொதுமக்கள் போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details