திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டத்திற்கு எதிராக பல குற்றங்களை செய்து வரும் நபர்கள் போலியாக பத்திரிகையாளர் அடையாள அட்டையை வைத்துக் கொண்டு, செங்கம் பகுதியில் உலா வருவதாகவும் பொது மக்களிடையே சென்று தான் ஒரு பத்திரிகையாளர் என மிரட்டிப் பணம் பறிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்களைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் செங்கம் பத்திரிகையாளர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
செங்கம் அடுத்த தீத்தாண்டப்பட்டு பகுதியைச் சேர்ந்த புகழேந்தி என்பவர், சட்டத்திற்கு புறம்பாக மணல் கடத்தலில் ஈடுபட்டு வருகிறார். இவர் அவ்வப்போது செங்கம் பகுதிகளில் மணல் கடத்திக்கொண்டு வரும்போது காவல் துறையினரிடம் பிடிபட்டால், தான் ஒரு பத்திரிகையாளர் என்றும், தன்னைப் பார்த்தால் திருடன் போல் தெரிகிறதா என வீர வசனம் பேசி, சுலபமாக அங்கிருந்து தப்பித்துச் சென்று விடுவாராம்.
இதேபோன்று சுமார் ஒரு ஆண்டாக தினக்கதிர் என்ற ஒரு பத்திரிகையின் பெயர் கொண்ட அடையாள அட்டையை போலியாக தயார் செய்து, தனது இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் 'பிரஸ்' என ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு, பொதுமக்களை மிரட்டிப் பணம் வசூல் செய்து கொண்டு வலம் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.