தமிழ்நாடு

tamil nadu

அதிக வட்டி தருவதாக கூறி ரூ.9 கோடி மோசடி; பணத்தை திருப்பி கேட்டதால் கொலை மிரட்டல்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 19, 2023, 10:27 AM IST

Fraud company at tiruvallur: திருவள்ளூரில் ரூ.9 கோடி வரை மோசடி செய்தவர்களிடமிருந்து பணத்தை மீட்டுத் தரக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதிக வட்டி தருவதாக கூறி ரூ.9 கோடி மோசடி: பணத்தை திருப்பி கேட்டதால் கொலை மிரட்டல்
அதிக வட்டி தருவதாக கூறி ரூ.9 கோடி மோசடி: பணத்தை திருப்பி கேட்டதால் கொலை மிரட்டல்

அதிக வட்டி தருவதாக கூறி ரூ.9 கோடி மோசடி: பணத்தை திருப்பி கேட்டதால் கொலை மிரட்டல்

திருவள்ளூர்:சென்னை துரைப்பாக்கத்தில் இயங்கி வரும் டிரேட் இசி என்ற நிதி மற்றும் பல்நோக்கு நிறுவனத்தின் கிளை திருவள்ளூர் மாவட்ட தலைநகர் திருவள்ளூர், ராஜாஜிபுரம் கணபதி நகரில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்திற்கு காரைக்குடியைச் சேர்ந்த பொன்சரவணன் என்பவர் நிறுவனத் தலைவராக இருந்து வருகிறார். தூத்துக்குடியைச் சேர்ந்த சுபாஷ் என்பவர் இணை நிறுவனராகவும், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலம் பகுதியைச் சேர்ந்த லோகேஷ் திருவள்ளூர் கிளைக்கு தலைவராகவும் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஒரு லட்சம் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக வாட்ஸ் அப் மற்றும் சமூக வளைத்தலங்களில் விளம்பரம் செய்துள்ளனர். மேலும், தாங்கள் பல்வேறு ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்வதால் வட்டி மேலும் கூடும் என்று ஆசை வார்த்தை கூறி, ஏஜென்டுகள் மூலம் ஆட்களை நியமித்து முதலீட்டை ஈர்க்கும் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

இதை நம்பி கப்பாங் கூட்ரோடு, பேரம்பாக்கம், உரியூர், திருவள்ளூர், தக்கோலம், நரசிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் ஏஜென்டுகள் மூலம் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். ஒரு லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை முதலீடு செய்தவர்களுக்கு 2, 3 மாதம் வட்டிப் பணத்தை ஏஜென்டுகள் மூலம் அனுப்பி உள்ளனர்.

இதையும் படிங்க: சென்னையில் போதையில் போலீசாரை ஆபாச வார்த்தை பேசி, தாக்கிய பெண் மீது வழக்கு!

அதனைத் தொடர்ந்து 3 மாதம் கழித்து வட்டி தராமல் காலம் தாழ்த்தியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள், ஏஜென்டுகளிடம் கேட்டுள்ளனர். ஏஜென்டுகள் திருவள்ளூர் நிர்வாகி லோகேஷ், பொன் சரவணன் மற்றும் சுபாஷ் ஆகியோரிடம் கேட்டபோது கூடிய விரைவில் கொடுத்துவிடுவோம், பணம் கைக்கு வரவில்லை என சொல்லி வந்துள்ளனர்.

கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் முதலீடு செய்திருப்பதால் உடனடியாக வழங்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் கேட்டதற்கு, பணம் கொடுக்கும்போது வாங்கிக்கொள், இல்லையென்றால் பணம் கொடுக்க நாங்கள் இருப்போம். வாங்குவதற்கு நீங்கள் இருக்க மாட்டீர்கள் என மிரட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதில் பெண்கள் பேசும்போது ஆபாச வார்த்தைகளால் திட்டியதுடன், பணத்தை கேட்டு இன்னொரு முறை வந்தால் நீ உயிரோடு இருக்க மாட்டாய் என பொன் சரவணன், சுபாஷ் மற்றும் லோகேஷ் ஆகிய 3 பேரும் மிரட்டியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். அதிலும் குறிப்பாக நிறுவனத் தலைவரான பொன் சரவணன் என்பவர், ஜான் ஜிஸ்கொயர் நிறுவனத்திற்கு சட்ட ஆலோசகராக இருப்பதால் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்றும் மிரட்டியுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறியுள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பணத்தை வாங்கி கொடுத்த ஏஜென்டுகள், திருவள்ளூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் ரூ.9 கோடி வரை மோசடி செய்த நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து பணத்தை மீட்டுத் தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: சீட்டு முடிந்ததும் பூட்டு போட்ட பிரபல நகை கடை;சென்னையில் நகை சீட்டு கட்டியவர்கள் போலீசில் புகார்

ABOUT THE AUTHOR

...view details