தமிழ்நாடு

tamil nadu

நண்பரின் திருமணத்திற்குச்சென்று திரும்புகையில் இளைஞர் கொலை

By

Published : Sep 1, 2022, 6:36 PM IST

திருவள்ளூர் அடுத்த ஊத்துக்கோட்டையில் திருமண நிகழ்ச்சியினை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞரைப் பின் தொடர்ந்து சென்று, வெட்டிக் கொன்ற கும்பலை, காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Etv Bharat இளைஞர் வழிமறித்து கொலை
Etv Bharat இளைஞர் வழிமறித்து கொலை

திருவள்ளூர்:ஊத்துக்கோட்டை அடுத்த அம்பேத்கர் நகர்ப்பகுதியில் வசித்து வரும் ஜார்ஜ் என்பவரின் மகன் ராபின் (23). இவர் தனது நண்பர்களுடன் ஊத்துக்கோட்டை பஜாரிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நண்பர் திருமணத்திற்காகச் சென்றுள்ளார்.

பின்னர் திருமணம் முடிந்து வீட்டிற்கு அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த கமல் என்பவருடன் சேர்ந்து, இருசக்கர வாகனத்தில் திரும்பிக்கொண்டிருந்தார். விவேகானந்தா பள்ளி அருகேவுள்ள வேகத்தடை அருகே அவரைப் பின்தொடர்ந்து வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் ராபின் வந்த இருசக்கர வாகனத்தைக் கீழே தள்ளிவிட்டு, அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றது.

இதில் பலத்த காயமடைந்த ராபின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊத்துக்கோட்டை காவல் துறையினர், அவரது உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கொலை நடந்தபோது ராபினுடன் இருந்த அவரது நண்பர் கமலிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவர் சென்ற திருமண நிகழ்ச்சியில் ஏதேனும் தகராறு நடைபெற்றதா? முன்விரோதம் காரணமா? எனப் பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:Video:நடுரோட்டில் கொலைவெறியுடன் சண்டையிட்டுக்கொண்ட ஆட்டோ ஓட்டுநர்கள்!

ABOUT THE AUTHOR

...view details