திருவள்ளூர்: தென்மேற்கு வங்க கடல் மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தீவிரமடைந்து மாண்டஸ் புயலாக வலுவடைந்தது. தெற்கு தென்கிழக்கு சென்னையிலிருந்து சுமார் 320 கிலோமீட்டர் தொலைவில் புயல் நிலை கொண்டுள்ளது.
புயலானது 12 கிலோமீட்டர் வேகத்தில் தொடர்ந்து நகர்ந்து வருவதால் இன்று (டிச. 9) நள்ளிரவு புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையே மாமல்லபுரத்தில் கரையை கடக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புயல் கரை கடக்கும் போது 85 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தை பொருத்தவரை அதி கனமழை பெய்யக்கூடும் என மாவட்டம் முழுவதும் ஆரஞ்சு அலர்ட் அறிவிப்பானது சென்னை வானிலை ஆய்வு மையத்தால் கொடுக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.
நேற்று (டிச.8) இரவு முதல் திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் தனது முழு கொள்ளளவான 35 அடியில் 33 அடி உயரம் நிரம்பியுள்ளது.