தமிழ்நாடு

tamil nadu

விநாயகர் சிலை விவகாரம்; வடமாநில தொழிலாளர் தற்கொலை முயற்சி; நள்ளிரவு வரை நீடித்த போராட்டம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 17, 2023, 4:03 PM IST

Ganesh Chaturthi 2023: விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய போடப்பட்ட தடையை நீக்கி, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், சிலையை விற்பதில் இழுபறி ஏற்பட்டதால் வடமாநில தொழிலாளி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விநாயகர் சிலை விவகாரத்தில் வடமாநில தொழிலாளர் தற்கொலை முயற்சி
விநாயகர் சிலை விவகாரத்தில் வடமாநில தொழிலாளர் தற்கொலை முயற்சி

விநாயகர் சிலை விவகாரத்தில் வடமாநில தொழிலாளர் தற்கொலை முயற்சி

திருநெல்வேலி:பாளையங்கோட்டை பகுதியில் உள்ள கிருபா நகரில் வட மாநில தொழிலாளர்கள் விநாயகர் சிலை தயாரிப்பு கூடம் அமைத்து, சிலைகளை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இங்கு நெல்லை உள்ளிட்ட தென் மாவட்ட பகுதிகளை சேர்ந்த விநாயகர் சதுர்த்தி விழா கமிட்டியினர் விநாயகர் சிலை வாங்க ஆர்டர்கள் கொடுத்துள்ளனர்.

சிலை தயாரிப்புக் கூடத்திற்கு சீல்:கடந்த சில தினங்களுக்கு முன்பு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், பாளையங்கோட்டை கிருபாநகர் விநாயகர் சிலை தயாரிப்பு கூடத்தில் இருந்து மாதிரிகள் சேகரித்து சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அதில் இரசாயன கலப்பு இருப்பது கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. வருவாய் துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள விநாயகர் சிலை தயாரிப்புக் கூடத்தை இரும்பு தகடுகள் கொண்டு பூட்டி சீல் வைத்தனர்.

விற்பனை செய்ய தடை இல்லை: இந்த நிலையில் இந்து முன்னணி பாஜக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடந்த மூன்று தினங்களாக போராட்டம் நடத்திய நிலையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இதனால் உயர் நீதிமன்றத்தில் சிலை தயாரிப்பு பணியில் ஈடுபடும் வட மாநில தொழிலாளர் பிரகாஷ் என்பவர் தொடுத்த வழக்கில் சிலைகளை விற்பனை செய்ய தடை இல்லை என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சிலை தர மறுப்பு:இந்த நிலையில் இந்து முன்னணி அமைப்பினர் நேற்றிரவு சிலைகளை பெற்றுக் கொள்வதற்காக பாளையங்கோட்டை பகுதிக்குச் சென்று உயர் நீதிமன்ற உத்தரவை காட்டியும் காவல் துறையினர் சிலைகளை கொடுக்க மறுத்ததால் இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வருவாய் துறையினர் தான் சிலைகளை ஒப்படைக்க வேண்டும் என்றும், காவல் துறையினர் பாதுகாப்பு மட்டுமே வழங்குகிறார்கள் என்றும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

வருவாய் துறை அதிகாரிகள் வர காலதாமதம் ஆன நிலையில், இந்து முன்னணி அமைப்பினர் தடையை மீறி, நீதிமன்ற உத்தரவை காட்டி சிலைகளை எடுத்துச் செல்ல முயற்சித்தனர். இதனால் போலீசாருக்கும் இந்து முன்னணி அமைப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை அடுத்து வருவாய் துறையினர் அங்கு வந்தனர். அப்போது நீதிமன்ற உத்தரவை காட்டி சிலைகளை எடுக்க முயற்சித்தனர். இருப்பினும் எந்த உடன்பாடும் எட்டப்படாமல் தொடர்ந்து போராட்டம் நீடித்து வந்தது.

ஒரு வருட உழைப்பு:சுமார் 6 மணி நேரத்திற்கு மேலாக நடந்த போராட்டத்தில் வருவாய்துறை, காவல் துறை, சிலை வாங்க வந்த தரப்புக்கும் இடையே வாக்குவாதம் மட்டுமே நடைபெற்றது. இந்த நிலையில் வடமாநில தொழிலாளர்கள் சிலைகளை விற்பனை செய்வதிலே தங்களது வாழ்வாதாரம் அடங்கியுள்ளது என்றும், ஒரு வருட காலமாக சிலைகளை வடிப்பதற்கு கடுமையாக பாடுபட்டோம் என்றும் அதிகாரிகளிடம் மன்றாடினர்.

தற்கொலை முயற்சி:இருப்பினும் எந்த முன்னேற்றமும் நடக்காத நிலையில் வட மாநில தொழிலாளரான ஜெகதீஸ், தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முற்பட்டார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை மீட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்த நெல்லை மாநகர துணை ஆணையாளர் ஆதர்ஷ் பச்சரா, சிலை தயாரிப்பாளர்கள் மற்றும் இந்து அமைப்பினருடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

பல மணி நேர போராட்டம் நிறைவு:அதன்பின் நீதிமன்ற வழிகாட்டுதல் படி அடையாள அட்டைகளை ஒப்படைத்து விட்டு, சிலைகளை எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினார். அதன் பின்னர் இந்து அமைப்பினர், ஒப்புதல் கடிதத்தை எழுதிக் கொடுத்து விட்டு சிலைகளை பெற்றுச் சென்றனர்.

ஆறு மணிநேர போராட்டத்திற்கு பின்னர் விநாயகர் சிலைகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் பட்டாசுகள் வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி விநாயகர் சிலைகளை அவரவர் பகுதிகளுக்கு கொண்டு சென்றனர். பல மணி நேரமாக போராட்டம் நடைபெற்ற நிலையில், கிருபா நகர் பகுதியில் 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இதையும் படிங்க:நெல்லையில் விநாயகர் சிலை விற்பனைக்கு தடை.. குடோன்களுக்கு சீல்! அதிர்ச்சியில் இந்து அமைப்புகள் - காரணம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details