தமிழ்நாடு

tamil nadu

நெல்லை மழை வெள்ள பாதிப்பில் இதுவரை 12 பேர் உயிரிழப்பு; 215 வீடுகள் முற்றிலும் சேதம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 20, 2023, 6:10 PM IST

tirunelveli rain flood affected report: நெல்லை மழை வெள்ள பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளதாகவும் மாவட்டம் முழுவதும் 215 வீடுகள் முற்றிலும் இடிந்து விழுந்து சேதமானதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

thirunelveli rain flood affected report
நெல்லை மழை வெள்ள பாதிப்பு.. 12 பேர் உயிரிழப்பு.. 215 வீடுகள் முற்றிலும் சேதம்..

திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் கடந்த 16ஆம் தேதி‌ தொடங்கி நேற்று முன்தினம் (டிச.18) மதியம் வரை வரலாறு காணாத அதிகனமழை பெய்தது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி, சுமார் ஒரு லட்சம் கன அடி தண்ணீர் ஆற்றில் சென்றது. இதில் ஆற்றங்கரையோர குடியிருப்புகள் மற்றும் கிராமங்களுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் அங்கு வசித்து வந்தவர்கள் வெளியேற்றப்பட்டு தனியார் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் (டிச.18) மழை சற்று குறையத் தொடங்கியதால் அணைக்கு நீர்வரத்து சரியத் தொடங்கியது. இதனால் ஆற்றில் வரும் வெள்ளம் குறையத் தொடங்கியது. நேற்று (டிச.19) காலை தாமிரபரணியில் தண்ணீரின் அளவு குறைந்துள்ளது.

இந்த நிலையில் நெல்லை சந்திப்பு பகுதியில் வெள்ளம் வடியத் தொடங்கியதை அடுத்து, சுமார் 60 வயது முதியவர் உடல் மீட்கப்பட்டது. இதேபோல் சி.என்.கிராமம் பகுதியில் சுமார் 80 வயது முதியவர் உடலும் மீட்கப்பட்டுள்ளது. மேலும் நெல்லை டவுனில் வெள்ள நீரில் சிக்கி உயிரிழந்த, சுத்தமல்லி பாரதி நகர்ப் பகுதியைச் சேர்ந்த, கூலித் தொழிலாளியான வள்ளுவன் (58) என்பவரது உடலும் மீட்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நெல்லை டவுனை அடுத்த பழைய பேட்டை கிருஷ்ண பேரி ஓடைக்கரை தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான கடற்கன்னி (58) என்பவர், நேற்று மாலை அதே பகுதியில் உள்ள குளத்து மறுகால் தண்ணீரில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டார்.

இதனைப் பார்த்தவர்கள் அவரை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் கடற்கன்னி வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு பேட்டை போலீசார் மற்றும் தீயணைப்பு மீட்புப் படையினரும் அவரை தொடர்ந்து தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை டவுண் மாதா பூங்கொடி தெருப்பகுதியில் கடற்கன்னி உடல் மீட்கப்பட்டது.

இதேபோல பாளையங்கோட்டை குலவணிகர்புரம் பகுதியில் வீடு இடிந்து விழுந்து சிவக்குமார் (59) என்பவர் இடிபாடுகளுக்குள் சிக்கிப் பலியானார். மேலும், நெல்லை அருகே உள்ள ரெட்டியார்பட்டியைச் சேர்ந்த அருணாச்சலம் (19) என்பவர் மோட்டார் சைக்கிளுடன் என்.ஜி.ஓ காலனி ஓடையில் விழுந்துள்ளார். இவரை வெள்ளம் அடித்துச் சென்ற நிலையில் இன்று (டிச.20) அவர் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்த சூழ்நிலையில் நெல்லையில் வெள்ளத்தில் சிக்கி நேற்று முன்தினம் (டிச.18) 3 பேர் உயிரிழந்த நிலையில் நேற்று (டிச 19) மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நெல்லையில் மழைக்குப் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. மேலும் வெள்ள நீரில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடலை மீட்ட போலீசார், அந்த உடல்களை உடற்கூறு ஆய்விற்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழையால் இதுவரை 215 வீடுகள் முழுமையாக இடிந்து சேதமடைந்து உள்ளதாகவும் ஆயிரக்கணக்கான வீடுகள் பகுதியாக இடிந்து சேதம் அடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:தாமிரபரணி ஆற்று வெள்ளத்தின் கழுகுப் பார்வை காட்சி!

ABOUT THE AUTHOR

...view details