திருநெல்வேலி:மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ”திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டு திருடப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள நகை, பணம் மற்றும் பொருட்களை இழந்த 254 நபர்களுக்கு அவை அவை மீட்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நடைபெற்ற கொள்ளை சம்பவங்களில் இருந்து 70 சதவீதம் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் இதுவே அதிகமான மீட்பு சதவீதமாகும்.
தென் மாவட்டங்களில் திருநெல்வேலி மாவட்டத்தில் தான் சாலை விபத்துக்கள் குறைவாக நடந்துள்ளது. 2022-ம் ஆண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் 219 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நன்னடத்தை பிணையை மீறியவர்கள் 48 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கிராமப் பகுதிகளில் முக்கியமான இடங்களில் 2,703 சிசிடிவி கேமராக்கள் இந்த ஆண்டு அமைக்கப்பட்டுள்ளது.
கொலை, போக்சோ வழக்குகள், வன்கொடுமை வழக்குகள் மற்றும் சாலை விபத்து வழக்குகளில் பாதிக்கப்பட்ட 355 நபர்களுக்கு நிவாரணத்தொகையாக ரூ.2.81 கோடி வழங்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தீவிர ரோந்து பணியின் அடிப்படையில் 182 கிலோ கஞ்சா, 30 ஆயிரம் கிலோ தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.