தமிழ்நாடு

tamil nadu

திருநெல்வேலியில் குற்றங்கள், விபத்துகள் குறைந்துள்ளன - எஸ்பி பேட்டி

By

Published : Dec 29, 2022, 11:04 PM IST

திருநெல்வேலி மாவட்டத்தில் 2022-ம் ஆண்டு குற்றச் சம்பவங்கள் குறைந்துள்ளதாகவும், தென் மாவட்டங்களில் திருநெல்வேலியில் தான் விபத்துகள் குறைவாக நடந்துள்ளதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் குற்றங்கள், விபத்துகள் குறைந்துள்ளது - எஸ்பி பேட்டி
நெல்லையில் குற்றங்கள், விபத்துகள் குறைந்துள்ளது - எஸ்பி பேட்டி

நெல்லையில் குற்றங்கள், விபத்துகள் குறைந்துள்ளது - எஸ்பி பேட்டி

திருநெல்வேலி:மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ”திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டு திருடப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள நகை, பணம் மற்றும் பொருட்களை இழந்த 254 நபர்களுக்கு அவை அவை மீட்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நடைபெற்ற கொள்ளை சம்பவங்களில் இருந்து 70 சதவீதம் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் இதுவே அதிகமான மீட்பு சதவீதமாகும்.

தென் மாவட்டங்களில் திருநெல்வேலி மாவட்டத்தில் தான் சாலை விபத்துக்கள் குறைவாக நடந்துள்ளது. 2022-ம் ஆண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் 219 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நன்னடத்தை பிணையை மீறியவர்கள் 48 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கிராமப் பகுதிகளில் முக்கியமான இடங்களில் 2,703 சிசிடிவி கேமராக்கள் இந்த ஆண்டு அமைக்கப்பட்டுள்ளது.

கொலை, போக்சோ வழக்குகள், வன்கொடுமை வழக்குகள் மற்றும் சாலை விபத்து வழக்குகளில் பாதிக்கப்பட்ட 355 நபர்களுக்கு நிவாரணத்தொகையாக ரூ.2.81 கோடி வழங்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தீவிர ரோந்து பணியின் அடிப்படையில் 182 கிலோ கஞ்சா, 30 ஆயிரம் கிலோ தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சாதி ரீதியிலான மோதல்களை தூண்டியதாக 80 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டுகளை விட கொலை முயற்சி மற்றும் கொலை வழக்குகள் இந்த ஆண்டு 32 சதவீதம் குறைந்துள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 42 சதவீதம் குறைந்துள்ளது. மாவட்ட போலீசாரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையினால் 16 கொலைகள் இந்த ஆண்டு தடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மோசடிகள் புகாரில் ரூ.13.50 லட்சம் மீட்கப்பட்டு 23 பேருக்கு திருப்பி வழங்கப்பட்டுள்ளது. நில அபகரிப்பு வழக்கில் இந்த ஆண்டு ரூ.10 கோடி மதிப்பிலான 31 ஏக்கர் இடங்கள் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு போக்சோ வழக்கில் 8 பேருக்கும், கொலை வழக்கில் 10 பேருக்கும் நீதிமன்ற தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி சுமார் 700 போலீசார் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்” இவ்வாறு அவர் கூறினார். இந்த பேட்டியின் போது ஏடிஎஸ்பி மாரிராஜன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: Audio Leak: ரேஷன் கடத்தல் கும்பலுடன் காவல் ஆய்வாளர் பேசும் உரையாடல்

ABOUT THE AUTHOR

...view details