திருநெல்வேலி:நாங்குநேரியைச்சேர்ந்த சாமிதுரை (26) என்பவர், கடந்த ஜூலை மாதம் 29ஆம் தேதி சந்தேகத்திற்குரிய நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், இந்த வழக்கில் பலர் கைது செய்யப்பட்டு, குண்டர் தடுப்புச்சட்டத்தின்கீழ் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் சாமிதுரை கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, தென்தமிழ்நாட்டைச்சேர்ந்த பிரபல ரவுடி ராக்கெட் ராஜா இன்று கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சாமிதுரை தரப்பிற்கும் ராக்கெட் ராஜா தரப்பிற்கும் இடையே சாதி ரீதியாக, பல ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வந்த நிலையில், சம்பவத்தன்று ராக்கெட் ராஜா திட்டப்படி, சாமிதுரை கொலை செய்யப்பட்டுள்ளார்.
எனவே, இந்த வழக்கில் கடந்த பல நாட்களாக நெல்லை மாவட்ட காவல்துறையினர் ராக்கெட் ராஜாவை தீவிரமாகத் தேடி வந்துள்ளனர். போலீசார் தேடுவதை அறிந்து அவரும் பதுங்கியுள்ளார். இந்த நிலையில் இன்று திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து நாங்குநேரி டிஎஸ்பி சதுர்வேதி தலைமையிலான நெல்லை தனிப்படை போலீசார், ராக்கெட் ராஜாவை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அவர் வெளிநாடு தப்பி செல்ல இருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவர் நாங்குநேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் கோவை சிறையில் அடைக்கப்பட்டார். ராக்கெட் ராஜா மீது ஐந்து கொலை வழக்குகள், உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒரு காலத்தில் ரவுடிகள் சாம்ராஜ்ஜியத்தில் கொடி கட்டிப் பறந்தவர்.
இவருக்குச்சொந்த ஊர் நெல்லை மாவட்டம், திசையன்விளை அடுத்த ஆனைக்குடி. 1990 கால கட்டங்களில் சாதி ரீதியான சண்டைகள், கட்டப்பஞ்சாயத்து, அடிதடி எனப்பல்வேறு சம்பவங்களில் ராக்கெட் ராஜா ஈடுபட்டு வந்தார். நாடார் சமுதாயத்தின் முக்கியத்தலைவராக அறியப்படும் கராத்தே செல்வினின் சீடராக இருந்தார். பின்னாளில் வெங்கடேஷ் பண்ணையாரின் வலதுகரமாக செயல்பட்டுவந்தார்.
பின்னர் அவரது மறைவுக்குப்பிறகு, சுபாஷ் பண்ணையாருடன் இணைந்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தார். குறிப்பாக, தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தைச்சேர்ந்த பசுபதி பாண்டியன் கொலை வழக்கு, பேராசிரியர் செந்தில் குமார் கொலை வழக்கு எனப்பல்வேறு கொலை வழக்குகளில் சந்தேகிக்கப்பட்ட, மாநில அளவிலான ரவுடிகள் பட்டியலில் முக்கிய இடம் பெற்றிருந்தார்.