மதுரை:திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் நடைபெற்ற பள்ளி மாணவர் கொடுந்தாக்குதல் சம்பவம் குறித்து மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் (People's Union for Civil Liberties) ஏழு பேர் கொண்ட குழு அண்மையில் உண்மை கண்டறியும் ஆய்வில் ஈடுபட்டு, அறிக்கையை வெளியிட்டுள்ளது. அது குறித்து பியூசிஎல் அமைப்பின் துணைத் தலைவர் பேராசிரியர் முரளி, ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு சிறப்பு நேர்காணல் வழங்கினார்.
மோசமான கொடுந்தாக்குதல்:அண்மையில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவர்கள் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அடங்கியுள்ளதாகக் கருதப்பட்டாலும் அந்தப் பிரச்சனை முடிந்துவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. பட்டியல் பிரிவைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மாணவர் இன்னும் மருத்துவ சிகிச்சையில்தான் உள்ளார். அவரது தங்கைக்கு 13 வயது. பாதிக்கப்பட்ட சின்னதுரைக்கு 17 வயது. 12-ஆம் வகுப்பு பயில்கிறார். பியூசிஎல் சார்பாக ஏழு பேர் கொண்ட குழு கள ஆய்வு மேற்கொண்டது.
பாதிக்கப்பட்ட மாணவரின் உடல்நிலை எப்போது தேறப்போகிறது என்பது கவலைக்குரிய ஒன்றாக உள்ளது. மீண்டெழுவார், ஆனால் முழுமையாக இதிலிருந்து விடுபடுவாரா என்பது கேள்விக்குறிதான். ஏனென்றால், அவரது உடலில் ஏழு இடங்களில் வெட்டுக்காயங்கள் உள்ளன. குறிப்பாக தோள்பட்டையில் மிக அழுத்தமாக வெட்டுப்பட்டுள்ளது. கால்கள் வெட்டப்பட்டு, நரம்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. அதற்காக சிறப்பு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுபோன்ற கொடூரமான தாக்குதலை சிறுவயதில் ஒரு மாணவன் எதிர்கொள்வது மிக மோசமானதாகும்.
தாழ்வு மனப்பான்மை:சக மாணவன் இதுபோன்ற ஒரு தாக்குதலுக்கு ஆளாக என்ன காரணம் என்பதைப் பார்த்தால், தொடர்ந்து அந்த மாணவர், சக மாணவர்களின் தொடர் துன்புறுத்துதலுக்கு ஆளாகியுள்ளார். நாங்குநேரியிலிருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள வள்ளியூரில்தான் அரசு உதவி பெறும் ஒரு பள்ளியில்தான் இவர்கள் பயில்கின்றனர். கடந்த 96 ஆண்டுகளாய் அப்பகுதியில் கல்விச் சேவையை ஆற்றி வரும் மிஷினரி பள்ளியாகும்.
அப்பள்ளியைப் பொறுத்தவரை ஒழுக்கக்கேடுகள் மிகக் குறைவாகவே உள்ளதென்றுதான் எங்களது ஆய்வில் தெரிய வந்துள்ளது. பள்ளித் தலைமையாசிரியையும் இதனை உறுதிப்படுத்துகிறார். பாதிக்கப்பட்ட மாணவர், அப்பள்ளியில் தான் சக மாணவரால் சித்திரவதைக்குத் தொடர்ந்து ஆளாகியுள்ளார். இது வழக்கமாகவே நடந்துள்ளது. வேலையாளைப் போன்று ஏவி பல்வேறு பணிகளைச் செய்யச் சொல்லித் துன்புறுத்தப்பட்டுள்ளார். உளவுரீதியாக தாழ்வு மனப்பான்மை கொண்டவராகவே மாற்றப்பட்டிருக்கிறார்.
உள்ளத்தின் வலி:ஒரு கட்டத்திற்குப் பிறகு இக்கொடுமையைத் தாங்க இயலாமல், பள்ளிக்கூடம் செல்வதையே தவிர்த்துள்ளார். ஏறக்குறைய பத்து நாட்களுக்கு பள்ளிக்கூடம் போகாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மும்பையிலிருந்து பாதிக்கப்பட்ட மாணவரின் வீட்டிற்கு வந்திருந்த அவரின் சித்தி, கேட்டபோதும்கூட ஒன்றும் சொல்லாமல், பிறகு அழுத்திக் கேட்ட பிறகுதான் பள்ளியில் தனக்கு நடந்த கொடுமைகளையெல்லாம் மாணவர் சின்னதுரை கூறியிருக்கிறார்.
இதுகுறித்து சின்னதுரையின் தாயார் பள்ளித் தலைமையாசிரியையிடம் சென்று புகார் தெரிவித்துள்ளார். அதனை எழுத்துப்பூர்வமாகவும் எழுதிக் கொடுத்துள்ளார். அப்பள்ளியில் உடலால் ஏற்பட்ட வலியைக் காட்டிலும் உள்ளத்தால் ஏற்பட்ட வலிதான் அம்மாணவரைப் பெரிதும் காயப்படுத்தியுள்ளது. ஒரு கட்டத்திற்குப் பிறகு படிப்பதையே விட்டுவிட்டு வேறு எங்கேனும் வேலைக்குச் செல்லலாம் என்றும்கூட அந்த மாணவர் முடிவெடுத்திருக்கிறார்.
சாதிய மிரட்டல்கள்:மாணவர் சின்னத்துரை தாயாரோடு பள்ளியில் புகார் மனு கொடுத்த அன்று, எதிர்தரப்பு மாணவர்களின் ஊரில் நடைபெற்ற கொடை விழா காரணமாக யாரும் பள்ளிக்கு வரவில்லை. அதன் காரணமாக பள்ளி நிர்வாகத்தால் அம்மாணவர்கள் விசாரிக்கப்படவில்லை. ஆனால், தங்கள் மீது புகார் அளிக்கப்பட்ட விபரம் தெரிந்தவுடன் அன்று மாலை சின்னத்துரையின் வீட்டிற்கு அக்குறிப்பிட்ட மாணவர் வந்து சத்தம் போட்டுள்ளான்.
சிறிது நேரம் கழித்து அந்த மாணவரின் பாட்டி, அண்ணன் ஆகியோரும் வந்து எங்களிடம் சொல்லாமல் பள்ளிக்குச் சென்று எதற்காக புகார் கொடுத்தீர்கள் என்றெல்லாம் மிரட்டும் தொனியில் பேசிவிட்டுச் சென்றுள்ளனர். இந்நிலையில் இரவு 10.30 மணியளவில் அந்த மாணவன் இரண்டு பேருடன் வீட்டிற்குள் நுழைந்து சின்னத்துரையின் தோள்பட்டையில் அரிவாளால் வெட்டுகிறான். அதனைத் தடுக்க முற்பட்டபோது கைகளிலும் வெட்டு ஏற்படுகிறது.
ஒரு வெட்டு வெட்டிய பின்னர் மற்றவர்களிடமும் அரிவாளைக் கொடுத்து அவர்களையும் வெட்டச் சொல்கிறான். அவர்களும் சின்னத்துரையை வெட்டுகிறார்கள். அப்போது அண்ணே வெட்டாதீங்கண்ணே என்று அவர்களை சின்னத்துரையின் தங்கை தடுக்க முயன்றுள்ளார். எங்களிடம் கூறும்போதுகூட, அந்தச் சிறுமி, “அந்த அண்ணன்கள் அடிப்பார்கள் என்று நினைத்தேன். வெட்டுவார்கள் என்று நினைக்கவில்லை” என்று வாக்குமூலம் கொடுத்துள்ளதன் மூலம், அடி என்றால் கூட தாங்கிக் கொள்ளலாம் என்ற அளவிற்கு அந்தப் பெண்ணின் மனோபாவம் இருந்தது தெரியவந்துள்ளது.
தொடர் வன்கொடுமை:மேற்கண்ட சம்பவத்திற்குப் பிறகு அந்த மாணவர்கள் அனைவரும் இருசக்கர வாகனத்தில் ஏறிச் சென்றுவிடுகிறார்கள். இதில் தொடர்புடைய ஏழு நபர்கள் மீது காவல்துறை தற்போது வழக்குப் பதிவு செய்துள்ளது. மூன்று பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. சிறார் குற்றப்பிரிவில் ஆறு பேரும் மற்றும் ஒருவர் பெரியவர்களுக்கான குற்றப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதனை அடிப்படையாகக் கொண்டு அப்பகுதியில் மேற்கொண்ட கள ஆய்வில், அப்பகுதியில் உள்ள பட்டியல் பிரிவு மக்கள் தொடர்ந்து அப்பகுதியில் ஆதிக்கத்திற்கு உள்ளாகி வருகின்றனர். நிலங்களைப் பிடுங்குதல், கந்து வட்டிக்குப் பணம் கொடுத்தல், உழாமல் போட்டு வைத்துள்ள நிலங்களில் அத்துமீறி ஆதிக்க சாதியினர் உழுதல் போன்ற தொந்தரவுகள் காரணமாக அப்பகுதியில் ஒரு வித அச்ச உணர்வு உள்ளது. இந்த சித்திரவதைகள் காரணமாக பட்டியல் சமூக மக்கள் அந்த ஊரைவிட்டு வெளியேறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.