தமிழ்நாடு

tamil nadu

கடும் வறட்சியில் நெல்லை மாவட்டம்.. அமைச்சர் கே.என்.நேரு சொன்ன பதில் என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 25, 2023, 6:51 PM IST

திருநெல்வேலியில் தண்ணீர் இல்லாமல் கடும் வறட்சி ஏற்பட்டுள்ள நிலையிலும் தனியார் குளிர்பான ஆலைகளுக்கு தண்ணீர் கொடுப்பதை தடுத்து நிறுத்த முடியாது என அமைச்சர் கே.என்.நேரு பேசியது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த ஓராண்டுக்கு மேலாக போதிய அளவு மழைப்பொழிவு இல்லாதனால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் வறட்சி நிலவுகிறது; 90 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட குளங்கள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை இருக்கும் நிலையில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோருடனான ஆலோசனை கூட்டம் அமைச்சர் நேரு தலைமையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

குடிநீர் பற்றாக்குறை தொடர்பாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட வாரியாக குடிநீர் பற்றாக்குறை, குடிநீர் வழங்குவதில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார். குடிநீர் பற்றாக்குறை உள்ள சூழ்நிலையில் கை இருப்பில் இருக்கும் குடிநீரை எவ்வாறு மக்களுக்கு பகிர்ந்து அளிப்பது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “முதலமைச்சரின் உத்தரவின்படி தென் மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை குறித்தான ஆலோசனைக் கூட்டத்திற்கு வந்துள்ளேன். நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் 75 விழுக்காடு அளவிற்கு சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஒரு சில இடங்களில் அதிகமாகவும், ஒரு சில இடங்களில் மிகவும் குறைவாகவும் தண்ணீர் வழங்கப்படுவதை ஆய்வு செய்து சீரான விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

கடல் நீரை குடிநீர் ஆக்குவதற்கு அதிகளவில் செலவாகிறது, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறையை போக்குவதற்கு கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டம் குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். ஒட்டன்சத்திரம், மதுரை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகள், ராமநாதபுரம் மாவட்டம் ஆகிய பகுதிகளுக்கு காவிரியில் இருந்து 4800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தண்ணீர் வழங்குவதற்கான திட்டப் பணிகள் தொடங்கப்பட்டது.

உறை கிணறுகள் வறண்டு விடாமல் இருக்க மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் உறை கிணறுகள் அமைத்தால் தடையின்றி தண்ணீர் வழங்க முடியும் என சட்டப்பேரவை உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர். இது போன்ற திட்டங்கள் பரிசீலிக்கப்படும். ஜல்ஜீவன் திட்டத்தில் இந்தியாவிலேயே சிறப்பாக தமிழ்நாடு செயல்பட்டுள்ளதாக கடந்த ஆண்டு மத்திய அரசு விருது வழங்கியது” என்றார்.

தொடர்ந்து, கூடங்குளம் பகுதியில் பொதுமக்களுக்கு தரமற்ற குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, “கூடங்குளம் பகுதிகளுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்த சில மாதங்களில் இந்த பணிகள் முடிவடையும்” என பதில் அளித்தார். அதனைத் தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்ட அணைகளில் போதிய தண்ணீர் இன்றி அணைகள் வறண்டு காணப்படுகிறது, பொதுமக்கள் தண்ணீர் இன்றி தவிக்கிறார்கள், ஆனால் தனியார் குடிநீர் ஆலைகளுக்கு மிகக்குறைந்த விலையில் தண்ணீர் தொடர்ந்து வழங்கப்படுகிறது. இது தடுத்து நிறுத்தப்படுமா? என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, முதலில் தண்ணீரே வழங்கப்படவில்லை என மறுத்த அமைச்சர், உறை கிணறு அமைத்து தண்ணீர் வழங்கப்படுகிறது என கூறியவுடன், “அவர்கள் சிறப்பு அனுமதி பெற்று தண்ணீரை பெறுகிறார்கள், அதனை தடுத்து நிறுத்த முடியாது, அவ்வாறு நிறுத்தினால் அவர்கள் நீதிமன்றம் செல்வார்கள் தண்ணீரை நிறுத்துவதற்கு அல்லது குறைப்பதற்கு நீங்கள் ஏதாவது ஆலோசனை இருந்தால் கூறுங்கள்” என அமைச்சர் செய்தியாளர்களை பார்த்து கேள்வி எழுப்பினார்.

மாநகராட்சியில் ஆயிரம் கோடி ரூபாய் அளவில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெற்றாலும் எவ்வித பணிகளும் பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் இல்லை என குற்றம் சாட்டப்படுகிறது என்ற கேள்விக்கு, உடனடியாக அங்கிருந்த ஆணையரை அழைத்த அமைச்சர் “மக்களுக்கு பயனளிக்கும் வகையில் திட்டங்களை உடனடியாக முடியுங்கள்” என கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.

இதையும் படிங்க:"ஹைதராபாத்தில் போட்டியிடுங்கள்" - ராகுல் காந்திக்கு அழைப்பு விடுத்த அசாதுதீன் ஓவைசி!

ABOUT THE AUTHOR

...view details