தமிழ்நாடு

tamil nadu

வெள்ள நிவாரண நிதி டோக்கன்: திருநெல்வேலியில் (டிச.26) இன்று தொடக்கம் - அலைமோதும் மக்கள்..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 26, 2023, 3:08 PM IST

Flood Relief fund token distribution: ரூபாய் 6 ஆயிரம் வெள்ள நிவாரண உதவித்தொகை, ஐந்து கிலோ அரிசி மற்றும் ஒரு கிலோ துவரம் பருப்பும் வழங்குவதற்கான டோக்கன் வழங்கும் பணி இன்று (டிச.26) தொடங்கியதை அடுத்து, ரேஷன் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

நிவாரண நிதிக்கான டோக்கன் வழங்கும் பணி திருநெல்வேலியில் இன்று தொடக்கம்
நிவாரண நிதிக்கான டோக்கன் வழங்கும் பணி திருநெல்வேலியில் இன்று தொடக்கம்

திருநெல்வேலி: அரபிக்கடலில் உருவான வளிமண்டல சுழற்சி காரணமாக டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. இந்த அதி கனமழையால் தாமிரபரணி ஆறு, கோதையாறு, குழித்துறை ஆறு உள்ளிட்ட ஆறுகளில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதன் காரணமாக வீடுகளுக்குள்ளும், சாலைகளிலும் மழைநீர் வெள்ளம் போல் தேங்கி நின்றது. இதனால், மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானதைத் தொடர்ந்து பல்வேறு மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதை அடுத்து, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் ரூபாய் 6 ஆயிரம் பணமும், 5 கிலோ அரிசி, 1 கிலோ துவரம் பருப்பு ஆகிய பொருட்களை ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக வழங்குவதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்தார்.

இந்த நிலையில், இன்று (டிச.25) நிவாரணத் தொகைக்கான டோக்கன் வழங்கும் பணி, பாளையங்கோட்டை மற்றும் சேரன்மகாதேவி தாலுகாக்களில் முழுமையாகவும், அம்பாசமுத்திரத்தில் 12 வருவாய் வட்டங்களிலும், நாங்குநேரியில் 30 வருவாய் வட்டங்களிலும், ராதாபுரத்தில் 10 வருவாய் வட்டங்களிலும் நடைபெற்றது.

மேலும், பாதிக்கப்பட்ட அனைத்து பொதுமக்களுக்கும் குடும்ப அட்டை அடிப்படையில் மேற்படி பொருட்களை வழங்குவதைக் கண்காணிக்கும் படியும், டோக்கன்களை வழங்கி பணப் பலன்கள் கிடைப்பதை உறுதி செய்யும் படியும் தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதனை அடுத்து, பாளையங்கோட்டையில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் டோக்கன் வழங்கும் பணி இன்று (டிச.26) காலை 8 மணி முதல் தொடங்கியது.

மேலும் இன்று (டிச.26), நாளை (டிச.27) மற்றும் நாளை மறுநாள் (டிச.28) ஆகிய மூன்று தினங்களும் டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. இதனை அடுத்து, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 29 மற்றும் 30ஆம் தேதிகளில் ரூபாய் 6 ஆயிரம் பணமும், 5 கிலோ அரிசி மற்றும் ஒரு கிலோ துவரம் பருப்பும் வழங்கப்படுகிறது. இதனை அடுத்து, ரேஷன் கடைகளில் டோக்கன்களை வாங்குவதற்காகப் பொதுமக்கள் குவிந்தனர்.

ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று டோக்கன்களை வழங்கிட அரசு அறிவுரை கூறியிருந்தாலும், தங்களுக்கு டோக்கன்கள் கிடைக்காமல் போய்விடுமோ என்ற எண்ணத்தில் பொதுமக்கள் ரேஷன் கடைகளில் அலை மோதுகின்றனர்.

இதையும் படிங்க:திருநெல்வேலி வெள்ளத்தில் மொத்தம் 16 பேர் உயிரிழப்பு.. மாவட்ட நிர்வாகம் தகவல்!

ABOUT THE AUTHOR

...view details