திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கௌதமபுரி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி மதியழகன் (48). இவர் கடந்த 27ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றபோது அதே பகுதியைச் சேர்ந்த 12 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
அவருடன் சென்ற சகோதரர் ரவிக்கும் லேசான வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அம்பாசமுத்திரம் காவல்துறையினர் கௌதமபுரியை சேர்ந்த ஊர் நாட்டாமை ராஜகோபால், முருகன், முத்து, அரவிந்த், பீமாராவ், செல்வம், மதன், கணேசன், பாக்யராஜ் உள்ளிட்ட 11 பேரை மறுநாள் கைது செய்தனர்.
இந்த நிலையில் ரவி கோயிலுக்கு அபராதம் செலுத்தாத காரணத்தால்தான் ஊர் நாட்டாமை, அவரது ஆதரவாளர்கள் திட்டமிட்டு ரவியின் சகோதரர் மதியழகனை கொலை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து பாதிக்கப்பட்ட ரவி தரப்பிடம் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் பின்வருமாறு:
கௌதமபுரி கிராமத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஊர் நாட்டாமை முறை நடைமுறையில் இருந்து வருகிறது. அதாவது ஊர் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் அங்குள்ள முத்தாரம்மன் கோயிலை நிர்வகிப்பதுடன் ஊரில் யாராவது தவறு செய்யும் பட்சத்தில் ஊர் மக்கள் அனைவரையும் கூட்டி பொதுமக்கள் முன்னிலையில் ஊர் தலைவர் பாதிக்கப்பட்டவருக்கு பஞ்சாயத்து செய்வார்.
ஆரம்பத்தில் யாராவது தவறு செய்தால் பஞ்சாயத்தில் ஊர் மக்கள் முன்னிலையில் தவறு செய்த நபர், அனைவரையும் பார்த்து கையெடுத்து கும்பிட்டுவிட்டு மன்னிப்பு கேட்டுவிட்டு செல்ல வேண்டும். இதுதான் அவருக்கு வழங்கப்படும் தண்டனையாக இருந்து வந்துள்ளது. நாளடைவில் தவறு செய்பவர்களுக்கு அபராதமாக ஊர் கோயிலுக்கு ஏதாவது பொருள்களை வாங்கி வைக்கும்படி தலைவர்கள் தீர்ப்பு வழங்கி வந்துள்ளனர்.
அந்த சமயத்தில்தான் தற்போது உயிரிழந்த மதியழகன் ஊர் தலைவராக இருந்துள்ளார். அவர் தலைவராக இருந்தபோது தவறுக்கு ஏற்றபடி பொருளாகவோ அல்லது பணமாகவோ அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பின்னர் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தற்போது இந்த வழக்கில் கைதாகியுள்ள ஊர் நாட்டாமை ராஜகோபால் குடும்பத்தைச் சேர்ந்த நபர்கள் ஊர் தலைவராக பதவியேற்றபோது அபராதம் செலுத்தும் முறை கடுமையாக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பெண்கள் விஷயத்தில் தவறு செய்தால் கடும் நடவடிக்கை எடுத்து வந்துள்ளனர். இந்த சூழ்நிலையில்தான் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ரவியின் மூத்த மகள் ஷியாமளா, அதேப் பகுதியை சேர்ந்த நபருடன் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
ஊர் வழக்கப்படி இது தவறு என்பதால் அப்போதைய நாட்டாமை கிருஷ்ணன் பஞ்சாயத்து கூட்டி ரவியிடம் 1,500 ரூபாய் அபராதம் கேட்டுள்ளார். ஆனால் அபராதம் செலுத்த ரவி மறுத்துள்ளார். பின்னர் காவல் நிலையத்தில் வைத்து ரவி எனக்கு இந்த திருமணத்தில் உடன்பாடு இல்லை எனது மகளுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை எனவே நான் அபராதம் செலுத்தமாட்டேன் என்று எழுதிக் கொடுத்துள்ளார்.
பின்னர் மீண்டும் பிரச்னை வந்தபோது அம்பாசமுத்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஒருவர் ரவி ஊரில் பிரச்னை வேண்டாம் என்றால் சொல்லுங்கள் நான் அபராதம் செலுத்துகிறேன் என்று கூறியுள்ளார். அதன்பிறகே ரவி 1,500 ரூபாய் அபராதம் செலுத்தி உள்ளார். ஆனால் அபராதம் செலுத்திய பிறகும் ரவி குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து பிரச்னை செய்துள்ளனர்.
பஞ்சாயத்துக்கு பலியான முதல் உயிர்:
இதுகுறித்து ஊர் நிர்வாகிகள் கூட்டம்போட்டு பேசியதை ரவியின் இளைய மகள் பத்மபிரியா கேட்டுள்ளார். ஏற்கனவே தனது அக்காவின் காதல் திருமணத்திற்குப் பிறகு ஊரில் நம்மை ஒதுக்கிவிட்டார்கள் என்ற மனவேதனையில் பத்மபிரியா இருந்துள்ளார்.
மேலும் அண்டை வீட்டாரிடம் பேசவிடாமல் தடுத்தது, தோழிகளுடன் பழகுவதற்கு தடை என பல சம்பவங்கள் பத்மபிரியாவின் மனதை பெரிதும் பாதித்துள்ளன. இதனால் கடந்த 2017இல் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அப்போது ரவியின் மூத்த மகள் சியாமளா குடும்பத்துடன் இணைந்துவிட்டார். எனவே மீண்டும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று அப்போது ஊர் நாட்டாமையாக இருந்த சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ஆனால் அதிக தொகை கேட்டதால் ரவி மீண்டும் அபராதம் செலுத்த மறுத்துள்ளார். இதன் காரணமாக ரவி குடும்பத்திற்கும் ஊர் நாட்டாமை தரப்பைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கும் கடந்த சில ஆண்டுகளாக அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
குறிப்பாக தற்போது உயிரிழந்த ரவியின் சகோதரர் மதியழகன், ஏற்கனவே ஊர் நாட்டாமை ஆக இருந்துள்ளதால் தற்போது நாட்டாமையாக இருந்து சில கணக்கு வழக்குகளை கேட்டுள்ளார். ஏற்கனவே ஊருக்கு அபராதம் செலுத்தாமல் ரவி குடும்பத்தினர் இருந்த நிலையில் கணக்கு வழக்குகளை கேட்டதால் நாட்டாமை தரப்பு மேலும் கோபம் அடைந்ததாக கூறப்படுகிறது