தமிழ்நாடு

tamil nadu

ராதாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் டிஸ்மிஸ்.. கலெக்டர் அதிரடி உத்தரவு

By

Published : Mar 27, 2022, 5:01 PM IST

Updated : Mar 28, 2022, 12:38 PM IST

அரசு பணத்தை கையாடல் செய்த அரசு அலுவலரை டிஸ்மிஸ் செய்து நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார்.

’அரசு பணத்தை கையாடல் செய்த அரசு அலுவலர் டிஸ்மிஸ்..!’; சாட்டையை சுழற்றிய நெல்லை ஆட்சியர்
’அரசு பணத்தை கையாடல் செய்த அரசு அலுவலர் டிஸ்மிஸ்..!’; சாட்டையை சுழற்றிய நெல்லை ஆட்சியர்

நெல்லை:ராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கஸ்தூரிரெங்கபுரம் ஊராட்சி செயலாளராக பாலசுப்பிரமணியன் என்பவர் பணிபுரிந்து வந்தார்.

இவருடைய மனைவி வாழவந்த கணபதி ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். இந்த நிலையில் தேர்தல் நடத்தை விதி முறைகளுக்கு முரணாக பாலசுப்பிரமணியம் செயல்பட்டதாக மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணுவிற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் புகார்கள் வந்தன.

ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்:இதனைத் தொடர்ந்து, விசாரணை நடத்தி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் பாலசுப்பிரமணியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள சேரன்மகாதேவி சார் ஆட்சியருக்கு மாவட்ட ஆட்சியரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் ஊராட்சி செயலாளர் கஸ்தூரிரெங்கபுரம் பகுதியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவருக்கு ஜல்சக்தி மிஷன் திட்டத்தில் பணிகள் நடைபெறாமலே ஊராட்சி பணம் ரூ.17 லட்சம் வங்கிக் கணக்கில் செலுத்தி அதைக் கையாடல் செய்ய முயன்றுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.

சட்டையை சுழற்றிய ஆட்சியர்: இந்தச் சூழ்நிலையில் கடந்த அக்.3ஆம் தேதி ராதாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் லயோலா ஜோசப் ஆரோக்யதாசும் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் ஊராட்சி செயலர் பாலசுப்பிரமணியன் நிதி மோசடி விவகாரத்தில் அப்போதைய ராதாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலரும் தற்போதைய உதவி இயக்குநர் (தணிக்கை) அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றும் லயோலா ஜோசப் ஆரோக்ய தாஸூம் முறைகேடாக பணம் விடுவித்தது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு லயோலா ஜோசப் ஆரோக்கிய தாசை டிஸ்மிஸ் (பணி நீக்கம்) செய்து உத்தரவிட்டார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பையும் அரசு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:கிணற்றில் தஞ்சமடைந்த 7 அடி முதலை: வனத்துறையினர் மீட்பு

Last Updated :Mar 28, 2022, 12:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details