தமிழ்நாடு

tamil nadu

ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் தவிக்கும் பயணிகள்; 1.3 டன் உணவு பொருட்களுடன் விரைந்த ஹெலிகாப்டர்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 19, 2023, 11:39 AM IST

Updated : Dec 19, 2023, 3:14 PM IST

கோயம்புத்தூர் மாவட்டத்தின் சார்பில் சூலூர் விமானப்படை தளத்திலிருந்து திருநெல்வேலி வெள்ள நிவாரணப் பணிகளுக்கு 1.3 டன் பால் பொருட்கள், பிரெட் உள்ளிட்டவை அனுப்பப்பட்டுள்ளன.

tirunelveli flood relief via helicopter to Srivaikuntam railway station
ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் தவிக்கும் பயணிகள்

திருநெல்வேலி:தமிழ்நாட்டில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் வளிமண்டல சுழற்சி காரணமாக, அதிக கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால், திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டு போக்குவரத்து சேவை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலானது தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி 17ஆம் தேதி இரவு சென்று கொண்டிருந்தது.

அப்போது பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், இந்த ரயில் பயணிகளுடன் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. அதோடு, வெள்ளத்தால் தண்டவாளங்கள் அடித்து செல்லப்பட்ட நிலையில், ரயிலை மேற்கொண்டு இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக, மொத்தம் உள்ள 22 பெட்டிகளில் சுமார் 800 பயணிகள் என மூன்றாவது நாளாக இன்றும் ரயிலுக்குள் பயணிகள் தவித்து வருகின்றனர்.

ரயில் நிலையத்தை சுற்றிலும் மழை வெள்ளம் சூழ்ந்து சுமார் 10 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் ரயில் பயணிகள் யாரும் அங்கிருந்து வெளியேற முடியாமலும் வெளியே இருந்து யாரும் ரயில் நிலையத்திற்குள் செல்ல முடியாத நிலையும் நீடித்து வருகிறது.

இதையடுத்து ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சுமார் 10 அடி உயரம் வரை வெள்ளம் தேங்கியுள்ளது. இதனால், ரயிலில் சிக்கியவர்களை மீட்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் ரயிலில் மாட்டிக் கொண்ட பயணிகள் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர்.

இதற்கிடையே, கோயம்புத்தூர் மாவட்டத்தின் சார்பில் சூலூர் விமானப்படை தளத்திலிருந்து திருநெல்வேலி வெள்ள நிவாரணப் பணிகளுக்கு சுமார் 1.3 டன் பால் பொருட்கள், பிரெட் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் ஹெலிகாப்டர் மூலம் அனுப்பப்பட்டுள்ளன. நாளை மீண்டும் கோவையில் இருந்து அத்தியாவசிய நிவாரண பொருட்கள் ஹெலிகாப்டர் மூலம் அனுப்பப்பட உள்ளன.

ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சென்னை, மதுரை போன்ற நகரங்களில் இருந்து ஆர்பிஎப் வீரர்கள் (RPF) தொடர்ந்து ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினர் இணைந்து ரயில் பயணிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, ரயிலில் உள்ள கர்ப்பிணிக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் மாட்டிக் கொண்ட 1000 பயணிகளின் கதி என்ன? - 3வது நாளாக உணவின்றி தவிப்பு!

Last Updated : Dec 19, 2023, 3:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details