தமிழ்நாடு

tamil nadu

பற்களைப் பிடுங்கிய விவகாரம்: ஏஎஸ்பி மீது வன்கொடுமை உள்பட மேலும் 2 வழக்குகள் பதிவு!

By

Published : May 3, 2023, 3:20 PM IST

விசாரணைக்கு வந்தவர்களின் பற்களைப் பிடுங்கிய வழக்கில் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர் சிங் மற்றும் காவலர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

CBCID police have registered two more cases against ASP Balveer Singh in undertrials teeth pulled out issue
விசாரணைக் கைதிகளின் பற்களைப் பிடுங்கிய விவகாரத்தில் ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது சிபிசிஐடி போலீசார் மேலும் இரண்டு வழக்குகள் பதிவு செய்துள்ளனர்

திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்ட காவல் நிலையங்களில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களைப் பிடுங்கியது சம்பந்தமாக அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் அருண்குமார் கொடுத்தப் புகாரின் பேரில் சிபிசிஐடி போலீசார் சிபிசிஐடி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் பல்வீர் சிங் மற்றும் காவலர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேலும் விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்தில் வேத நாராயணன் என்பவர் கொடுத்தப் புகாரின் பேரிலும் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் மற்றும் காவலர்கள் மீது மேலும் இரண்டு வழக்குகளை சிபிசிஐடி போலீசார் தற்பொழுது பதிவு செய்துள்ளனர். இதுபற்றி விசாரணை நடத்துவதற்காக வருகிற ஐந்தாம் தேதி வெள்ளிக்கிழமை நெல்லையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக 8 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே பாளையங்கோட்டையைச் சேர்ந்த சுபாஷ் என்பவரின் புகாரின் பேரில், பல்வீர் சிங் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், கல்லிடைக்குறிச்சி காவல் நிலையங்களில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்கள் பிடுங்கியது சம்பந்தமாகப் புகார்கள் வந்ததின் பேரில் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதனையடுத்து இந்த வழக்கை விசாரிப்பதற்காக சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலம் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவருடைய இடைக்கால அறிக்கையின் பரிந்துரையின்படி மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதாவை விசாரணை அதிகாரியாகத் தமிழ்நாடு அரசு நியமித்தது.

இந்த நிலையில் நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சுபாஷ் என்பவரின் புகாரின் பேரில், பல்வீர் சிங் மீது நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்திருந்தனர். மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா நடத்திய இரண்டு கட்ட விசாரணை அறிக்கையின்படி இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி காவல் ஆய்வாளர் உலக ராணி நியமிக்கப்பட்டார். அவர் இந்த வழக்கு விசாரணை சம்பந்தமாகப் புகார் கொடுத்த சுபாஷ் மற்றும் பலரிடமும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திலும் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இந்த வழக்கை விசாரிப்பதற்காக மேலும் சிபிசிஐடி திட்டமிட்ட குற்றங்கள் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கரும் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் அருண்குமார் என்பவர் கொடுத்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு இந்த வழக்கை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கர் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, பல்வீர் சிங் மற்றும் சில காவலர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

மேலும் விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்தில் வேத நாராயணன் என்பவர் கொடுத்தப் புகாரின் பேரில் சிபிசிஐடி காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி பல்வீர்சிங் மீது மற்றொரு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த இரண்டு வழக்குகள் சம்பந்தமாக விசாரணைக்கு ஆஜராகுமாறு கணேசன், அருண்குமார், இரண்டு சிறார்கள், ராசு, மகேந்திரன், சாம் ஆகியோர் வருகிற ஐந்தாம் தேதி வெள்ளிக்கிழமை நெல்லை சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராக சம்மன் வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆருத்ரா, ஏ.ஆர்.டி பாணியில் 'பிராவிடன்ஸ் டிரேடிங்' மோசடி.. 2 ஆயிரம் கோடியை மீட்கக்கோரி முதலீட்டாளர்கள் கண்ணீர் மல்க புகார்!

ABOUT THE AUTHOR

...view details