தமிழ்நாடு

tamil nadu

Arikomban: அரிக்கொம்பன் களமிறங்கிட்டான்... வனப்பகுதியில் இருந்து கீழே இறங்கியது எப்படி? - பரபரப்பு தகவல்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 19, 2023, 1:58 PM IST

Arikomban elephant atrocity: மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி நெல்லை வனப்பகுதிக்குள் விட்ட அரிக்கொம்பன் யானை, மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தியதால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

Arikomban elephant atrocity
அரிக்கொம்பன் களமிறங்கிட்டான்... வனப்பகுதியில் இருந்து கீழே இறங்கியது எப்படி?

அரிக்கொம்பன் களமிறங்கிட்டான்... வனப்பகுதியில் இருந்து கீழே இறங்கியது எப்படி? - பரபரப்பு தகவல்

திருநெல்வேலி: கடந்த சில நாட்களுக்கு முன்னர், கேரள மாநில மக்களை அச்சுறுத்தி வந்த அரிக்கொம்பன் என்ற அரிசி கொம்பன் காட்டு யானை, கேரளாவின் இடுக்கி மாவட்டம் வழியாக தமிழ்நாட்டின் தேனி மாவட்ட வனப்பகுதி மற்றும் கம்பம் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தியது.

அதன் பின்னர் கும்கி யானைகளின் உதவியுடன் அட்டகாசம் செய்த அரிக்கொம்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர். அதனைத் தொடர்ந்து, நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள அடர்ந்த வனப்பகுதியான மேல் கோதையாறு அணை அருகே முத்துக்குழி வயல் பகுதியில் கடந்த ஜூன் 5 ஆம் தேதி அரிக்கொம்பனை விட்டனர்.

மேலும், அரிக்கொம்பன் யானையின் நடமாட்டத்தைக் கண்காணிக்க, அதன் கழுத்தில் ஒரு ரேடியோ கருவியையும் பொருத்தி கண்காணித்து வருகின்றனர். இதற்கிடையே கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி இரவு நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை தேயிலை தோட்ட வனப்பகுதியில் அரிக்கொம்பன் யானை நடமாடியதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, நாலுமுக்கு தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில், உள்ள வாழை மரங்களை அந்த யானை சாய்த்து, வாழைத்தார்களை தின்று சேதப்படுத்தி உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அதிகாரிகள் மற்றும் வனத்துறை ஊழியர்கள் விரைந்து சென்று மலைப்பகுதியில் ஆய்வு செய்தனர்.

அப்போது அரிக்கொம்பன் யானை குடியிருப்பு பகுதிக்குள் மீண்டும் புகுந்து மரங்களை சேதப்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அரிக்கொம்பனைத் தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இந்நிலையில், இன்று (செப். 19) காலை ஊத்து எஸ்டேட் பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் அருகே அரிக்கொம்பன் நிற்பதை வனத்துறையினர் கண்டறிந்தனர்.

தற்போது அதனை வனத்துக்குள் விரட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் அரிக்கொம்பன் யானையை நெல்லை வனப்பகுதிக்கு கொண்டு வரும்போது அங்குள்ள பொதுமக்கள் மற்றும் பழங்குடி மக்கள் சேர்ந்து, காட்டு யானையை தங்கள் பகுதியில் விடக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதேசமயம் யானை விடப்படும் முத்துக்குழி வயல் பகுதி பசுமை நிறைந்து காணப்படுவதாலும், யானைக்கு தேவையான தண்ணீர் மற்றும் உணவுகள் அதிகளவு இருப்பதால் யானை அங்கிருந்து கீழே இறங்கி வர வாய்ப்பில்லை என வனத்துறை அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

ஆனால் யானை விடப்பட்ட 3 மாத இடைவெளியில் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து பொருட்களை சேதப்படுத்திருப்பது மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளிகள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குனர் செண்பகா தேவி கூறும்போது, "மாஞ்சோலை வனப்பகுதியில் நடமாடி வருவது அரிக்கொம்பன் யானை தான். வேறு யானை கூட்டம் எதுவும் வரவில்லை.

அரிக்கொம்பன் யானையின் கண்ணுக்கு மேலே மஸ்து உள்ளது. அது இருக்கும் வரை யானையின் நடவடிக்கைகள் ஆக்ரோஷமாக இருக்கும். இதுபோன்ற பாதிப்பு ஆண்டுக்கு ஒருமுறை வரும். அதனை சரி செய்ய மருத்துவக் குழுவுக்கு பரிந்துரை செய்துள்ளோம். அதன்பின்னர் முண்டந்துறை அடர் வனப்பகுதிக்கு யானை விரட்டப்படும்" என தெரிவித்தார்.

இதனிடையே அரிக்கொம்பன் யானை நடமாட்டத்தை தொடர்ந்து மாஞ்சோலை, நாலுமுக்கு, குதிரைவெட்டி, காக்காச்சி ஆகிய பகுதிகளுக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விநாயகர் சிலை விற்பனை விவகாரத்தில் உச்ச நிதிமன்றம் அதிரடி.. தலைமை நீதிபதி கூறியது என்ன?

ABOUT THE AUTHOR

...view details