திருநெல்வேலி:முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 5ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லை மத்திய மாவட்ட அலுவலகத்தில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவகம் போல் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு நினைவகத்தில் மலர்த் தூவி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “உலகம் இருக்கும் வரையில் தமிழ்நாடு மக்களுக்காக கலைஞர் செய்த பணி இருக்கும். நெல்லை மத்திய மாவட்டத்தில் சென்னை கடற்கரையில் அண்ணாவின் அருகில் கலைஞர் துயில் கொள்ளும் நினைவகம் போன்று சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு காலையில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள், திமுகவினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் விவசாயத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிப்பதற்குத் தேவையான பணிகளை மாவட்ட ஆட்சியர் மேற்கொண்டு வருகிறார். விவசாயிகளின் கோரிக்கைகள் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் நல்ல செய்தி வரும்” எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான், திமுக மூத்த நிர்வாகி சுப.சீத்தாராமன், மாநகரச் செயலாளர் சுப்பிரமணியன், மாநில வர்தகர் அணி இணைச் செயலாளர் மாலைராஜா, மாநில மகளிர் தொண்டரணி துணைச் செயலாளர் விஜிலாசத்தியானந்த், மேயர் சரவணன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஏ.எல்.எஸ்.லட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.