தேனி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை ஓட்டியுள்ள இடங்களில் கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று (ஆகஸ்ட் 5) இரவு போடிநாயக்கனூர், தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம் உள்ளிட்ட இடங்களில் பலத்த சூறைக்காற்று வீசியது. இதில் போடி அருகே உள்ள தேவர் காலனி, சூலப்புரம், பொட்டிப்புரம் தம்மிநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீசிய சூறைக்காற்றால் 20க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமடைந்தன. பலத்த காற்று காரணமாக வீட்டின் மேற்கூரைகள், தகரங்கள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டன.
மேலும் அப்பகுதியில் இருந்த மின் கம்பங்களும் தரை மட்டமாகின. இதில் சுமார் 10க்கும் மேற்பட்ட மின்சார கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இருந்த போதிலும் இரவு முழுவதும் மின்சாரம் இன்றி பெரும் துயரத்துக்கு ஆளானதாகவும், தங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, தமிழ்நாடு அரசு நிவாரண உதவி வழங்கி தங்கள் பகுதியில் இடிந்து விழுந்த வீடுகளை மீண்டும் சரி செய்து தர வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.