தமிழ்நாடு

tamil nadu

காட்டுமாடு தாக்கியதில் விவசாயி பலி? கரடு முரடான பாதையில் டோலி கட்டி உடலை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அவலம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 23, 2023, 10:33 PM IST

திண்டுக்கல் மாவட்டம் வெள்ளகெவி அருகே உள்ள மலைக்கிராமத்தில் காட்டு மாடு முட்டி பலியான விவசாயின் உடலை, சாலை வசதி இல்லாததால் 9 கிலோ மீட்டர் தூரம் டோலி மூலம் அப்பகுதி மக்கள் தூக்கிச்சென்றனர். அடிப்படை வசதிகள் இல்லாததால் தெடர்ந்து இப்படியான உயிரிழப்புகள் ஏற்படுவதாக அப்பகுதி மலை கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

காட்டுமாடு தாக்கியதில் விவசாயி பலி
காட்டுமாடு தாக்கியதில் விவசாயி பலி

காட்டுமாடு தாக்கியதில் விவசாயி பலி

தேனி: பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணைக்கு மேல் பகுதியில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகாவிற்கு உட்பட்ட வெள்ளகெவி ஊராட்சியில் பெரியூர், சின்னூர் மலை கிராமம் அமைந்துள்ளது. இந்த மலை கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த மலைக் கிராமத்தில் ராமகிருஷ்ணன் (வயது 60) என்பவர் விவசாயம் செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த நவம்பர் 22ஆம் தேதி தோட்டது வேலைக்குச் சென்ற விவசாயி ராமகிருஷ்ணன் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால், அப்பகுதி கிராம மக்கள் அவரைத் தேடிச் சென்று உள்ளனர். அப்போது தோட்டத்தில் ரத்த காயங்களுடன் ராமகிருஷ்ணன் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து இறந்தவரின் உடலை பார்த்த உறவினர்கள், காட்டுமாடு தாக்கியதால் ராமகிருஷ்ணன் பலியாகி இருக்கலாம் எனத் தெரிவித்தனர். இதையடுத்து அப்பகுதிக்குச் சம்பந்தப்பட்ட தேவதானப்பட்டி வனச்சரக அதிகாரிக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்குச் சென்ற தேவதானப்பட்டி வனச்சரக அதிகாரி டேவிட் ராஜ் பலியானவரின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

மேலும் உரிய விசாரனைக்கு பிறகே ராமகிருஷ்ணன் எப்படி உயிரிழந்தார் என்பதை உறுதிபடுத்த முடியும் எனத் தெரிவித்தார். போதிய போக்குவரத்து வசதியின்றி தவிக்கும் இந்த மலைக்கிராம மக்கள், ராமகிருஷ்ணனின் உடலை உடற்கூராய்விற்காக பெரியகுளம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, பெரியூர் மலை கிராமத்தில் இருந்து ஒத்தையடி பாதையில் 9 கிலோ மீட்டர் தூரம் டோலி கட்டி தூக்கிக் கொண்டு 4 மணி நேரமாக பெரியகுளம் அருகே உள்ள உப்புக்காடு என்ற இடம் வரை நடந்தே வந்துள்ளனர்.

பின்னர் இங்கிருந்து உடல் ஆம்புலன்ஸ் மூலம் பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது. இதனிடையே காட்டு மாடு முட்டியதில் பலியான ராமகிருஷ்ணனின் இறப்பை தாங்காத அவரது மனைவி பராசக்திக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் அவரையும் அப்பகுதி மலைவாழ் கிராம மக்கள் டோலி கட்டி தூக்கிச் சென்று பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இது குறித்து அப்பகுதி மலைவாழ் கிராம மக்கள் கூறுகையில், "எங்களுக்கு அடிப்படை வசதியான சாலை வசதி இல்லாததால் அவ்வப்போது இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்படுகின்றன. சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியும் இன்றுவரை எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்றுவரையிலும் உடல் நலக்குறைவு ஏற்பட்டவர் மற்றும் இறந்தவர்களின் உடலை டோலி கட்டி தூக்கி சுமந்து வருகின்றோம். சாலை வசதி இல்லாததால் தொடர்ந்து இது போன்ற உயிர்ப்பலிகள் ஏற்பட்டு வருகின்றது" என வேதனை தெரிவித்தார்.

இதையும் படிங்க:சென்னையில் ரூ.4 கோடி மதிப்பிலான சொத்து ஆள்மாறாட்டம் மூலம் அபகரிப்பு..! 5 பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details