தமிழ்நாடு

tamil nadu

ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு சீரியல் கொள்ளை... தேனியை கதிகலக்கும் முகமூடி கொள்ளையர்கள்! போலீசார் விசாரணை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 22, 2023, 2:20 PM IST

Theni serial robbery: போடிநாயக்கனூர் பகுதியில் நடைபெற்று வரும் தொடர் கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு, சீரியல் கொள்ளை
ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு, சீரியல் கொள்ளை

ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு, சீரியல் கொள்ளை

தேனி :போடிநாயக்கனூர், மேலசொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணா நகர் குடியிருப்பில், வசித்து வரும் ஓய்வு பெற்ற ஆசிரியர் ராமமூர்த்தி என்பவர், மருத்துவ சிகிச்சைக்காக தனது மனைவி உடன் திருச்சி சென்று உள்ளார். இந்த நிலையில் இன்று (டிச.22) காலை ராமமூர்த்தியின் உறவினர், அவரது வீட்டை வந்து பார்த்த பொழுது வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலை அடுத்து சம்பவ இடந்த்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், இடத்தை ஆய்வு செய்து விசாரணை நடத்திய போது, வீட்டில் இருந்த வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்துள்ளது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதே பகுதியில் நேற்று (டிச.21) சென்னை சென்றிருந்த சரவணகுமார் என்பவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு சுமார் 3 1/2 பவுன் தங்க நகை, வெள்ளிப் பொருட்கள் மற்றும் 800 ரூபாய் ரொக்க பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இதேபோல் 1 மாதத்திற்கு முன்பு வெளியூர் சென்றிருந்த அன்னலட்சுமி என்பவரின் வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு சுமார் 14 பவுன் தங்க நகைகள் வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளது.

அதே பகுதியில், அதே நாளில் மகள் வீட்டிற்குச் சென்றிருந்த மின்வாரிய ஊழியர் ஒருவர் வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு வீட்டிலிருந்த வெள்ளி பொருட்கள் மற்றும் எல்.இ.டி டிவி போன்றவை கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளது. ஒரு மாத காலம் ஆகியும் இன்னும் கொள்ளையர்கள் பிடிபடாத நிலையில், ஒரே பகுதியில் தொடர்ந்து நடைபெறும் இந்த கொள்ளை சம்பவம் இப்பகுதியில் உள்ள மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்ந்து நடைபெறும் இந்த கொள்ளை சம்பவத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இப்பகுதியில் அடிக்கடி கொள்ளை சம்பவம் நடைபெற்று வருவதால் இதை கண்காணிக்க, இப்பகுதி மக்கள் சுமார் மூன்று லட்சம் செலவு செய்து இப்பகுதியில் சிசிடிவி கேமராக்கள் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

போடிநாயக்கனூர் கிருஷ்ணா நகர் பகுதியில், ஆளில்லாத பூட்டப்பட்ட வீடுகளை நோட்டமிட்டு, மீண்டும் மீண்டும் நடைபெற்று வரும் தொடர் கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த கொள்ளை சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:அடுத்தடுத்த வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளை.. அச்சத்தில் ராணிப்பேட்டை மக்கள்!

ABOUT THE AUTHOR

...view details