தேனி:போடி- மதுரை இடையான மீட்டர் கேஜ் ரயில் பாதை அகற்றப்பட்டு அகல ரயில் பாதை அமைக்கும் பணிக்காக போடி - மதுரை இடையான ரயில் சேவை கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டு ரயில்வே பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து, கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதத்தில், தேனி - மதுரை இடையான முதல் கட்ட அகல ரயில் பாதைப் பணிகள் முடிவு பெற்று பயணிகள் ரயில் இயக்கப்பட்டது.
அதேநேரம், போடி - தேனி வரையிலான ரயில்வே பணிகள் மேற்கொள்ளப்பட்டு பல்வேறு கட்ட ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்று வந்த நிலையில், நேற்று (ஜூன் 15) இறுதி கட்ட சோதனை ஓட்டத்திற்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் விரைவு ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது போடி முதல் மதுரை வரையிலான முழு பயணிகள் ரயில் சேவை திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. இதன் அடிப்படையில், போடி ரயில் நிலையத்தில் போடி - மதுரை இடையான ரயில் சேவை மற்றும் போடி - சென்னை இடையேயான ரயில் சேவை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த தொடக்க விழா நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, பூச்செண்டு கொடுத்து மரியாதை தெரிவிக்கப்பட்டது.