நீலகிரி: மசினகுடி உள்ளிட்ட பகுதிகளில் வனவிலங்குகள் அதிகளவில் வசித்துவருகின்றன. இதே பகுதியைச் சேர்ந்த கௌரி, கடந்த ஆண்டு புலி தாக்கி உயிரிழந்தார். பின்னர் அங்கிருந்து கூடலூர் அருகே உள்ள தேவன் எஸ்டேட் பகுதிக்கு நகர்ந்த புலி, குஞ்சு கிருஷ்ணன், சந்திரன் ஆகிய இருவரை அடித்துக் கொன்றது.
இந்நிலையில், நேற்று (அக். 1) கூடலூர் அருகே தேவன் எஸ்டேட் பகுதியில் சந்திரன் என்பவர் வழக்கம்போல் மாடு மேய்க்கச் சென்றார். அப்போது அங்கு பதுங்கியிருந்த புலி அவரைத் தாக்கியதில் தலை, முதுகு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார்.
புலியால் மீண்டும் உயிரிழப்பு நிகழ்ந்ததால் ஆத்திரமடைந்த உறவினர்கள், பொதுமக்கள், அதனைச் சுட்டுப்பிடிக்கக் கோரி இறந்தவரின் உடலை சாலையில் கிடத்தி மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல் துறை, வனத் துறை நடத்திய பேச்சுவார்த்தையில் புலியைச் சுட்டுக் கொன்று பிடிப்போம் என உறுதி அளித்த பின்பு உறவினர்கள் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய எடுத்துச் சென்றனர்.