தமிழ்நாடு

tamil nadu

காட்டு யானைக்கு தீவைத்த வழக்கு: 3ஆவது குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்!

By

Published : Feb 16, 2022, 2:48 PM IST

உதகை அருகே மாவனல்லா பகுதியில் காட்டு யானைக்கு தீவைத்த வழக்கில் 3ஆவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட ரிக்கி ரயான் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

காட்டுயானைக்கு தீ வைத்த வழக்கு
காட்டுயானைக்கு தீ வைத்த வழக்கு

நீலகிரி:உதகை அருகே உள்ள மாவனல்லா, மசினகுடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஆண்டு 50 வயதுடைய காட்டு யானை முதுகில் பலத்த காயத்துடன் சுற்றித்திரிந்தது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் வனத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் தேதி காயமடைந்த யானைக்கு சிகிச்சை அளிப்பதற்காக மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கப்பட்டது. ஆனால் பலத்த காயம் காரணமாக அன்றே யானை உயிரிழந்தது.

பிரேத பரிசோதனையில் யானையின் காதுப் பகுதியில் பலத்த தீக்காயம் இருப்பதை மருத்துவர்கள் உறுதிசெய்தனர். இது தொடர்பாக வனத் துறை தனிப்படை அமைத்து விசாரித்துவந்த நிலையில் மாவநல்லா பகுதியில் தனியார் தங்கும் விடுதியில் இருந்த சிலர் யானைக்குத் தீவைத்த காணொலி வலைதளங்களில் பரவியது.

3ஆவது குற்றவாளி ரிக்கி ராயன்

இதில் ரிக்கி ராயன் என்பவரது விடுதி வழியாக வந்த யானையைத் துரத்த ரிக்கி ராயனின் சகோதரர் ரேமண்ட் டீன், இவர்களோடு பணியில் இருந்த பிரசாந்த் ஆகியோர் யானைக்குத் தீவைத்து வனப்பகுதிக்குள் விரட்டியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிந்த வனத் துறையினர் அந்த விடுதிக்குச் சீல்வைத்தனர்.

மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய ரேமண்ட் டீன் விடுதிப் பணியாளர் பிராசாந்த் ஆகியோரைக் கைதுசெய்தனர். இவர்கள் தற்போது குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் ரிக்கிராயன் கடந்த ஓராண்டு காலமாகத் தலைமறைவாக இருந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் உதகை நீதிமன்றத்தில் முன் பிணை மனு தாக்கல்செய்யப்பட்ட நிலையில் அந்த மனு தள்ளுபடிசெய்யப்பட்டது. இந்நிலையில் இவர் கூடலூர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். நீதிமன்றத்தில் சரணடைந்த ரிக்கி ராயன் கைதுசெய்யப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : 'அதிமுக உள்ளாட்சியில் முதலில் வெல்லட்டும்; நாடாளுமன்றத் தேர்தலைப் பற்றி பிறகு பேசலாம்!'

ABOUT THE AUTHOR

...view details