தமிழ்நாடு

tamil nadu

மனைவி உள்பட 3 பேரை அரிவாளால் சரமாரியாக தாக்கிவிட்டு, தப்பிக்க முயன்ற கணவர் லாரி மோதி உயிரிழப்பு..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 15, 2023, 5:12 PM IST

Wife including 3 people attacked by husband: தஞ்சையில் மனைவி உள்பட 3 பேரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய கணவர், காரில் தப்பிச்சென்ற போது லாரி மோதி உயிரிழந்தார்.

மனைவி உள்பட 3 பேரை அரிவாளால் சரமாரியாக தாக்கிய கணவர் லாரி மோதி உயிரிழப்பு
மனைவி உள்பட 3 பேரை அரிவாளால் சரமாரியாக தாக்கிய கணவர் லாரி மோதி உயிரிழப்பு

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம், நாஞ்சிக்கோட்டை சாலை விக்டோரியா காலணியைச் சேர்ந்தவர் சுந்தர் கணேஷ்(42). தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக வேலை இல்லாமல் வீட்டிலிருந்துள்ளார். அவரது மனைவி நித்யா (39) தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் மண்டல அலுவலகத்தில் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய வீட்டை விற்கும் முயற்சி தொடர்பாக இருவருக்கும் இடையே கடந்த சில நாட்களாகத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று (டிச.15) காலை மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த சுந்தர் கணேஷ் வீட்டிலிருந்த நித்யாவை சரமாரியாக அரிவாளால் வெட்டினார்‌. இதில், நித்யா பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.

இதையடுத்து, காரில் தப்பிச் சென்ற சுந்தர் கணேஷ், பரிசுத்தம் நகரில் உள்ள பால் விற்பனை மையத்திற்குள் திடீரென புகுந்து அங்கு வியாபாரம் செய்து வந்த கிழ திருப்பூந்துருத்தியைச் சேர்ந்த தாமரைச்செல்வன்(35), கோபி(32) ஆகியோரையும் அரிவாளால் வெட்டினார். இதில், தாமரைச்செல்வன், கோபி ஆகிய இரண்டு பேரும் பலத்த காயம் அடைந்தனர். அடுத்தடுத்து, நடந்த இந்த அரிவாள் வெட்டு தாக்குதலில் காயமடைந்த நித்யா தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், தாமரைச்செல்வன், கோபி ஆகியோர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே மனைவி உள்பட 3 பேரையும் அரிவாளால் வெட்டிய சுந்தர் கணேஷ் காரில் தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தப்பிச் சென்று கொண்டிருந்த போது செங்கிப்பட்டி அருகே முத்தாண்டிப்பட்டி பகுதியில் லாரி மீது கார் மோதியது. இதில் சுந்தர் கணேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த 3 சம்பவங்கள் குறித்து தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் தெற்கு மற்றும் செங்கிப்பட்டி காவல் துறையினர் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையில், சுந்தர் கணேஷ் வீட்டிற்கு தாமரைச்செல்வன், கோபி ஆகியோர் நடத்தி வரும் பால் விற்பனை மையத்திலிருந்து தொடர்ந்து பால் போடப்பட்டு வந்துள்ளது. ஆனால் சில நாட்களுக்கு முன்பு பால் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனால் அவர்களுக்குள் ஏதேனும் முன்விரோதம் இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இருப்பினும் இதுவரையில், 3 பேரையும் அரிவாளால் வெட்டியதற்கான முழுமையான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணை முடிவில் பல்வேறு தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சினிமா பாணியில் நடைபெற்ற இந்தச் சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து; ஒருவர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details